சென்னையில் நடைபெறும் உள்ளிருப்பு போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்


சென்னையில் நடைபெறும் உள்ளிருப்பு போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும்
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 8:04 PM GMT)

வருகிற 28-ந் தேதி சென்னையில் நடைபெறும் உள்ளிருப்பு போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் பங்கேற்க வேண்டும் என்று பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சுப்ரமணியன் தலைமை தாங்கினார். இணை செயலாளர் ராஜா, துணை தலைவர் ராமநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் மணிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் மகேந்திரன் தொடக்கவுரையாற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சங்கத்தின் மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் சங்கத்தின் கோரிக்கைகள் குறித்து பேசினார். இதையடுத்து மாவட்ட செயலாளர் மகேந்திரன் விளக்கவுரையாற்றினார். கூட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி பணப்பலன்கள் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறா ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு வேலை நிதியில் ஊதியம் வழங்குவதை கைவிட்டு, அரசின் பொது நிதியில் ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் பணிநீக்க காலத்தில் மற்றும் பணி காலத்தில் இறந்தவர்களின் வாரிசுகளுக்கு 13 ஆண்டு காலமாக வாரிசுப்பணி வழங்க தடையாக உள்ள விதிமுறைகளை தளர்த்தி பணி வழங்க வேண்டும்.

உள்ளிருப்பு போராட்டம்

சாலை பராமரிப்பு பணியை தனியார் பராமரிக்க வழங்கும் கொள்கை முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 28-ந் தேதி சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை முதன்மை இயக்குனர் அலுவலக வளாகத்தில் சாலை பணியாளர்கள் குடும்பத்துடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதில் பெரம்பலூர் மாவட்டத்தில் சாலை பணியாளர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் பங்கேற்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் பெரம்பலூர் சாலை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் ரஜினி வரவேற்றார். முடிவில் இணை செயலாளர் முத்து நன்றி கூறினார். 

Next Story