பாடை கட்டி தூக்கி சென்று கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயற்சி இந்து மக்கள் கட்சியினர் கைது


பாடை கட்டி தூக்கி சென்று கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயற்சி இந்து மக்கள் கட்சியினர் கைது
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 8:14 PM GMT)

பாடை கட்டி தூக்கி சென்று கமல்ஹாசன் உருவபொம்மையை எரிக்க முயன்ற இந்து மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

மலைக்கோட்டை,

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் ‘முதல் தீவிரவாதி இந்து’ என்று சர்ச்சைக்குரிய கருத்தை பேசினார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பும், சிலர் கமல்ஹாசனுக்கு ஆதரவும் தெரிவித்தனர்.ஆனால், கமல்ஹாசன் அதற்கு மறுப்பு ஏதும் செல்லாமல், தனது கருத்தை உறுதிப்படுத்தும் வகையில் வரலாற்று உண்மையைத்தான் சொன்னேன் என மீண்டும் தெரிவித்தார். கமல்ஹாசன் மீது நடவடிக்கைகோரி தமிழ்நாட்டில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் புகார் செய்யப் பட்டுள்ளது. தன்னை கைது செய்யாமல் இருக்க அவர் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனுவும் செய்துள்ளார். கமல்ஹாசனுக்கு எதிராக இந்து அமைப்புகள் சார்பில் பல்வேறு போராட்டங்களும் நடந்து வருகிறது. கமல்ஹாசனை கைது செய்யக்கோரி திருச்சியில் நேற்று இந்து மக்கள் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.

திருச்சி தேவதானம் அருகே உள்ள ஓயாமாரி சுடுகாட்டுக்கு, கமல்ஹாசன் உருவபொம்மையை பாடை கட்டி தூக்கி சென்று எரிப்பதற்காக இந்து மக்கள் கட்சியினர் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும், கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையிலான போலீசார் அதை தடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஆனால், இந்து மக்கள் கட்சியினர் ஓயாமாரி சுடுகாட்டுக்கு மாற்றுப்பாதையில், கமல்ஹாசன் உருவபொம்மையை பாடையில் கட்டி, அதை மாவட்ட தலைவர் பரமானந்தன் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் முருகன், பொதுச்செயலாளர் பெரியண்ணன் மற்றும் வேலு ஆகிய 4 பேர் தூக்கி சென்றனர்.

உடனடியாக விரைந்து சென்ற போலீசார், பாடையுடன் கமல்ஹாசன் உருவபொம்மையை பறித்து அப்புறப்படுத்தினார்கள். இந்த சம்பவத்தால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் கோட்டை போலீசார், கமல்ஹாசன் உருவபொம்மையை பாடை கட்டி தூக்கி சென்று எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாக இந்து மக்கள் கட்சியினர் 4 பேரையும் கைது செய்தனர். அப்போது மாவட்ட தலைவர் பரமானந்தன் கூறுகையில், ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி இந்துதான் என்று பேசிய கமல்ஹாசனை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திருச்சி ஓயாமாரி சுடுகாட்டில் அவரது உருவபொம்மையை தூக்கி வந்து தகனம் செய்திட திட்டமிட்டோம். அதை போலீசார் தடுத்து விட்டனர். கமல்ஹாசனை கைது செய்யாவிட்டால் மீண்டும் போராட்டம் வெடிக்கும்” என்றார். 

Next Story