பேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்ய குவியும் பொதுமக்கள்


பேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்ய குவியும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 19 May 2019 11:00 PM GMT (Updated: 19 May 2019 9:16 PM GMT)

ஓசூர் அருகே பேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்ய பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.

ஓசூர்,

கர்நாடக மாநிலம் பெங்களூரு ஈஜிபுரா பகுதியில் நிறுவப்படுவதற்காக, பிரமாண்ட கோதண்டராமர் சிலை, திருவண்ணாமலையிலிருந்து பெரிய லாரியில் கிருஷ்ணகிரி, ஓசூர் வழியாக கொண்டு செல்லப்படுகிறது. வழியில் பல்வேறு இடங்களில் லாரி டயர்கள் வெடிப்பு, லாரி செல்வதற்கான மண் சாலை, தற்காலிக பாலம் அமைத்தல் போன்ற பணிகளுக்காக, 3 மாத காலம் சூளகிரி அருகே சாமல்பள்ளம் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டது.

இந்த பணிகள் அனைத்தும் நிறைவடைந்ததை தொடர்ந்து, கடந்த 3-ம் தேதி, கோதண்டராமர் சிலை, சாமல்பள்ளத்திலிருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டது. ஆனால் சிறிது தூரம் சென்றவுடன் லாரி டயர்கள் மீண்டும் பஞ்சர் ஆகி, இம்மிடிநாயக்கனபள்ளி என்ற இடத்தில் லாரி நிறுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்து புறப்பட்ட நிலையில், சின்னார் என்ற இடத்தில் பாதை சமமாக இல்லாத காரணத்தால் லாரி சக்கரம் மண்ணில் சிக்கி, மேற்கொண்டு நகர முடியாத நிலை ஏற்பட்டது.

மண் சாலை அடித்து செல்லப்பட்டது

இதையடுத்து மண் சாலையை சமப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு கடந்த 8-ந் தேதி சின்னாரிலிருந்து லாரி புறப்பட்டு, சூளகிரி, கோனேரிப்பள்ளி, காமன்தொட்டி வழியாக கோபசந்திரம் வந்தது. அங்கும் மண் பாதையில் லாரி சிக்கிக்கொண்டதால், மேற்கொண் டு நகர முடியாத நிலை ஏற்பட்டது. பின்னர் பாதை சரி செய்யப்பட்டு ஓசூர் அருகே பேரண்டபள்ளியை லாரி வந்தடைந்தது.

இந்த நிலையில் பேரண்டபள்ளியிலிருந்து ஓசூர் நோக்கி செல்லும்போது, வழியில் தென்பெண்ணை ஆற்றை லாரி கடந்து செல்வதற்கு வசதியாக மேம்பாலத்தையொட்டி, மண் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், தொடர் மழை காரணமாகவும் அங்கு அமைக்கப்பட்டிருந்த மண் சாலை அடித்து செல்லப்பட்டது. மேலும், பெங்களூரு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து கெலவரப்பள்ளி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

குவியும் பொதுமக்கள்

அணை நீரை தொடர்ந்து திறந்து விட வேண்டிய நிலை நிலை ஏற்பட்டிருப்பதாலும், ஓசூர் பகுதியில் நாள்தோறும் மழை பெய்து வருவதாலும் தென்பெண்ணை ஆற்றின் அருகே மண் பாலம் அமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மாற்று ஏற்பாடாக ஆற்றில் குழாய்கள் அமைத்து அதன்மீது மண்ணை கொட்டி, மண் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

ஆனால் இந்த பணிகள் இன்னும் தொடங்கவில்லை. எனவே, 12-வது நாளாக கோதண்டராமர் சிலை, பேரண்டபள்ளியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. பேரண்டபள்ளியில் நிறுத்தப்பட்டுள்ள கோதண்டராமர் சிலையை தரிசனம் செய்ய தினமும் ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக அங்கு குவிந்து வருகின்றனர். மேலும் சிலைக்கு பூஜைகள் செய்து வழிபட்டனர். மேலும் கோதண்டராமர் சிலை முன்பு ஏராளமானோர் ஆர்வத்துடன் போட்டோ மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். 

Next Story