சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் சலவைத் தொழில் பாதிப்பு


சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் சலவைத் தொழில் பாதிப்பு
x
தினத்தந்தி 20 May 2019 11:00 PM GMT (Updated: 20 May 2019 4:58 PM GMT)

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் சலவைத் தொழில் பாதிப்படைந்து வருகிறது.

சென்னை,

சென்னையில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்தே தண்ணீர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் வராததால், குழாயடியை தேடி காலிக் குடங்களுடன் செல்வதே மக்களின் வாடிக்கையாகி வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் குடிநீர் லாரிகள் தான் பெரும்பாலான மக்களுக்கு கடவுளாகவே காட்சி தருகின்றன.

அந்தளவு குடிநீர் தட்டுப்பாடு தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் குடிநீரை மூலாதாரமாக கொண்ட தொழில்கள் சரிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக சலவைத் தொழில் பெரும்பாதிப்பை சந்தித்து வருகிறது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மாநகராட்சி சலவை கூடத்துக்கு சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், கோடம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து துணிகள் கொண்டு வரப்படுகின்றன. ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வரும் துணிகள் இங்கு சலவை செய்யப்படுகின்றன. இந்த சலவை பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இந்த சலவை கூடத்தில் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. போதுமான தண்ணீர் கிடைக்காததால் சலவைக்கு துணிகள் வாங்க தொழிலாளர்கள் தயங்குகிறார்கள்.

இதுகுறித்து சென்னை ரஜக யுவஜன சலவையாளர்கள் சங்கத் தலைவர் ஜி.விஷ்ணுராம் கூறுகையில், “தற்போது மாநகராட்சி அமைத்து 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் வரும் தண்ணீரின் அளவும் குறைந்துவிட்டது. அடிபம்பு குழாய்களிலும் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. இதனால் வாங்கும் துணிகளின் அளவை 50 சதவீதம் குறைத்துவிட்டோம். இதனால் வருமானமும் பாதிக்கிறது. எனவே எங்களுக்கு தினமும் தண்ணீர் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்”, என்றார்.


Next Story