மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு கும்பகோணத்தில், கர்நாடக மந்திரி பேட்டி


மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு கும்பகோணத்தில், கர்நாடக மந்திரி பேட்டி
x
தினத்தந்தி 20 May 2019 11:00 PM GMT (Updated: 20 May 2019 7:23 PM GMT)

மழை பெய்தால் காவிரியில் தண்ணீர் திறக்க வாய்ப்பு உள்ளதாக கும்பகோணத்தில் கர்நாடக மந்திரி ரேவண்ணா கூறினார்.

கும்பகோணம்,

முன்னாள் பிரதமரும், மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான தேவேகவுடா நேற்று கும்பகோணம் சாரங்கபாணி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்தார்.

அவருடன், அவருடைய மூத்த மகனும் கர்நாடக மாநில பொதுப்பணித்துறை மந்திரியுமான ரேவண்ணாவும் வந்திருந்தார். இவர்களுக்கு கோவில் நிர்வாக அதிகாரி ஆசைதம்பி மற்றும் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.

பெருமாள், தாயார் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த தேவேகவுடா, ரேவண்ணா ஆகியோர், கோவிலின் தலவரலாறு குறித்து அதிகாரிகளிடம் விளக்கமாக கேட்டறிந்தனர். பின்னர் கோவிலில் இருந்து வெளியே வந்த தேவேகவுடாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்ப முயன்றனர். ஆனால் அவர் சாமி தரிசனம் செய்ய வந்ததாக கூறி அங்கிருந்து சென்று விட்டார்.

இதையடுத்து கர்நாடக மாநில பொதுப்பணித்துறை மந்திரி ரேவண்ணாவிடம் நிருபர்கள், அடுத்த மாதம் (ஜூன்) 12-ந் தேதி காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படுமா? என கேட்டனர். அதற்கு அவர், “கர்நாடகாவில் தண்ணீர் இல்லை. மழையும் இல்லை. மழை பெய்தால் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட வாய்ப்பு உள்ளது” என்று பதில் அளித்தார்.

முன்னாள் பிரதமர் மற்றும் கர்நாடக மாநில மந்திரி வருகையையொட்டி கும்பகோணம் சாரங்கபாணி கோவிலில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு சோதனை நடத்தப்பட்டது.

Next Story