“கடனை அடைக்க நண்பரிடம் ரூ.2 கோடி கேட்டு கெஞ்சினார்” தற்கொலை செய்த தொழில் அதிபர் பற்றி உருக்கமான தகவல்


“கடனை அடைக்க நண்பரிடம் ரூ.2 கோடி கேட்டு கெஞ்சினார்” தற்கொலை செய்த தொழில் அதிபர் பற்றி உருக்கமான தகவல்
x
தினத்தந்தி 20 May 2019 11:00 PM GMT (Updated: 20 May 2019 9:24 PM GMT)

நாகர்கோவிலில் குடும்பத்துடன் தற்கொலை செய்த தொழில் அதிபர், சாவதற்கு முன் கடனை அடைக்க சென்னை நண்பரிடம் ரூ.2 கோடி கேட்டு கெஞ்சியிருக்கிறார். ஆனால் கடைசி முயற்சியும் பலன் இல்லாமல் போனதால் அவர் இந்த விபரீத முடிவை தேடிக்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரி வஞ்சி மார்த்தாண்டம் புது தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 52). தொழில் அதிபரான இவர் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவருடைய மனைவி ஹேமா (48). இவர்களுக்கு ஷிவானி (20) என்ற மகள் இருந்தாள். இவர்களுடன் சுப்பிரமணியனின் தாயார் ருக்குமணியும் (72) வசித்து வந்தார். ஷிவானி குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் படித்தார்.

இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் சுப்பிரமணியன் தனது மனைவி ஹேமா, மகள் ஷிவானி, தாயார் ருக்குமணி ஆகியோருடன் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நாகர்கோவிலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வடசேரி போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் சுப்பிரமணியன் நடத்தி வந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதே சமயம் மகளை ஓமியோபதி மருத்துவம் படிக்க வைப்பதற்காக வங்கிகள், தனி நபர்களிடம் கடன் வாங்கியதாகவும், அந்த கடனையும், அதற்கான வட்டியையும் செலுத்த முடியாமல் அவர் திணறியதாகவும், அதனால் அவர் குடும்பத்தோடு தற்கொலை செய்யும் முடிவுக்கு வந்ததும் தெரிய வந்துள்ளது.

அதே சமயத்தில் கடன் கொடுத்தவர்கள் யாராவது செல்போனில் மிரட்டினார்களா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே சுப்பிரமணியன் தற்கொலை செய்வதற்கு முன்பு சென்னையில் உள்ள தனது நண்பர் ஒருவரை தொடர்பு கொண்டு பேசியது தெரிய வந்துள்ளது. அவரிடம் ரூ.2 கோடி கடன் கேட்டு கெஞ்சியுள்ளார். அதற்கு அவர் பணம் இல்லை என்று கைவிரித்து விட்டதாகவும் தெரிகிறது.

மேலும் வேறு யாரிடமாவது பணம் பெற்று தாருங்கள் என்று கேட்டதாகவும், அதற்கும் அவர் மழுப்பலான பதில் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அவருடைய கடைசி முயற்சியும் கைகூடாததால், சுப்பிரமணியன் நம்பிக்கையை இழந்து விட்டார். அதேபோல் மற்ற நபர்களும் பணம் இல்லை என்று கூறியதால், வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவெடுத்த அவர் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு வந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் சுப்பிரமணியன் செல்போன் எண்ணை பழுது பார்த்து, அதில் பதிவாகி உள்ள எண்கள் மூலம் போலீசார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.

Next Story