ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்


ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 21 May 2019 11:00 PM GMT (Updated: 21 May 2019 6:52 PM GMT)

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என விவசாயிகள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் உலகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாசிலாமணி கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் மத்திய அரசு மீண்டும், மீண்டும் புதிய இடங்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கி வருகிறது.

மக்களை பாதுகாக்க வேண்டிய தமிழக அரசு இதனை வேடிக்கை பார்த்து வருகிறது. ஆதலால் மக்களை பாதிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அவ்வாறு ரத்து செய்யா விட்டால் அடுத்த மாதம் (ஜூன்) திருவாரூர் மாவட்டத்தில் ஒன்றிய, நகரங்களில் அனைத்து பகுதி மக்களையும் திரட்டி போராட்டம் நடத்த வேண்டும். இந்த திட்டத்தை முழுமையாக விளக்கிடும் முறையில் கருத்தரங்கம் நடத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஜோசப், சவுந்தர்ராஜன், பரந்தாமன், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story