மெஞ்ஞானபுரம் அருகே அதிவேகமாக சென்ற 9 லாரிகள் சிறைபிடிப்பு


மெஞ்ஞானபுரம் அருகே அதிவேகமாக சென்ற 9 லாரிகள் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 21 May 2019 9:45 PM GMT (Updated: 21 May 2019 7:06 PM GMT)

மெஞ்ஞானபுரம் அருகே அதிவேகமாக சென்ற 9 லாரிகளை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

மெஞ்ஞானபுரம்,

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள கல்லாமொழியில் அனல் மின்நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்கு தேவையான மணல் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம் பகுதியில் இருந்து லாரிகள் மூலம் நங்கைமொழி, மெஞ்ஞானபுரம் பஜார் வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை மணல் ஏற்றி வந்த லாரி ஒன்று மெஞ்ஞானபுரத்தை அடுத்த நங்கைமொழி பஸ்நிறுத்தம் அருகே வேகமாக சென்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் டயர் வெடித்ததால் லாரி தாறுமாறாக ஓடியது. அந்த வழியாக நடந்து வந்தவர்கள், அங்கிருந்து ஓடி உயிர் தப்பினர். பின்னர் அந்த லாரி சாலையோரத்தில் நின்றது. தொடர்ந்து அந்த பகுதியில் 8 லாரிகள் மணல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக சென்றன.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், அந்த 9 லாரிகளையும் சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த உடன்குடி வருவாய் ஆய்வாளர் தாகிர் அகமது, கிராம நிர்வாக அதிகாரி கணேசன் மற்றும் மெஞ்ஞானபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, லாரிகளை அதிவேகமாக ஓட்டி சென்ற டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் மிதமான வேகத்தில் லாரிகளை ஓட்ட வேண்டும் என்று டிரைவர்களிடம் போலீசார் அறிவுறுத்தினர்.

இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story