சேத்துப்பட்டு அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மனைவி, மகன் கொலை


சேத்துப்பட்டு அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து மனைவி, மகன் கொலை
x
தினத்தந்தி 21 May 2019 11:00 PM GMT (Updated: 21 May 2019 10:17 PM GMT)

சேத்துப்பட்டு அருகே குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து தனது மனைவி மற்றும் மகனை கொலை செய்த லாரி உரிமையாளருக்கு, தனது 2 மகள்களுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சேத்துப்பட்டு,

சேத்துப்பட்டு அருகே கடன்பிரச்சினையில் லாரி உரிமையாளர் தனது மனைவி, மகன், மகள்களுக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட்டு தானும் அதே குளிர்பானத்தை குடித்தார். இதில் அவரது மனைவியும், மகனும் இறந்த நிலையில் 2 மகள்களுடன் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சேத்துப்பட்டை அடுத்த இமாபுரம் என்ற தூளி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் சீனு (வயது 32). சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வந்தார். இவரும் விஜயலட்சுமி (29) என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள்கள் பிரதிபா (வயது 10), திவ்யதர்சினி (8). மகன் ரித்திக்ரோஷன் (5).

சீனு ஆரம்பத்தில் வாடகைக்கு சரக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அவருக்கு சொந்தமாக லாரி வாங்கி ஓட்டவேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதன்படி ரூ.6 லட்சம் கடன் பெற்று லாரி ஒன்று வாங்கி ஓட்டி வந்துள்ளார். இந்த நிலையில் வாங்கிய கடனுக்கு சீனு சரிவர தவணை கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் மனஉளைச்சலில் இருந்துள்ளார். மேலும் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சீனு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள திட்டமிட்டார். அதன்படி சீனு, அனாதிமங்கலம் கிராமத்தில் நடக்கும் கோவிலுக்கு செல்வோம் என்று மனைவி மற்றும் குழந்தைகளிடம் தெரிவித்து அவர்களை அழைத்துச் சென்றார். அப்போது செல்லும் வழியில் பெரணமல்லூர் ஏரிக்கு சீனு சென்றார்.

அங்கு அவர் மனதை கல்லாக்கிக் கொண்டு குளிர்பானத்தில் விஷம் கலந்து அதனை மனைவிக்கும், குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார். தந்தை கொடுப்பது நஞ்சு கலந்த குளிர்பானம் என்பதை அறியாமல் குழந்தைகள் வாங்கி குடித்தனர். பின்னர் அதனை மனைவி விஜயலட்சுமிக்கும் கொடுத்து விட்டு சீனுவும் குடித்தார். பின்னர் சிறிது நேரத்தில் அனைவரும் வாயில் நுரை தள்ளியபடி மயக்கம் போட்டு விழுந்தனர்.

இதைப்பார்த்த அக்கம்பக்கத்தில் வேலை செய்து கொண்டிருந்த 100 நாள் வேலை பணியாளர்கள் அங்கு ஓடி வந்து அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேத்துப்பட்டு போளூர் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு விஜயலட்சுமி பரிதாபமாக இறந்து விட்டார். மற்ற 4 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே ரித்திக்ரோஷன் இறந்து விட்டான். தாயும், மகனுக்கும் விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் மருத்துவமனையில் சீனு மற்றும் அவரது மகள்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜேசுதாஸ் (செய்யாறு), பிரகாஷ்பாபு (போளூர்), இன்ஸ்பெக்டர்கள் வெங்கடேசன் (பெரணமல்லூர்), நரசிம்மன் (சேத்துப்பட்டு), சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், விநாயகம் ஆகியோர் சம்பவஇடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும், சீனு வசிக்கும் பகுதிக்கும் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து பெரணமல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story