தாளவாடி அருகே பரபரப்பு வானத்தில் இருந்து தீப்பிழம்புடன் எரிகல் விழுந்ததா? கிராம மக்கள் பீதி


தாளவாடி அருகே பரபரப்பு வானத்தில் இருந்து தீப்பிழம்புடன் எரிகல் விழுந்ததா? கிராம மக்கள் பீதி
x
தினத்தந்தி 22 May 2019 11:15 PM GMT (Updated: 22 May 2019 7:37 PM GMT)

தாளவாடி அருகே வானத்தில் இருந்து தீப்பிழம்பு விழுந்தது. அது எரிகல்லாக இருக்குமோ? என்று கிராம மக்கள் பீதியில் உள்ளார்கள்.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் ஏராளமான மலை கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்கள் பெரும்பாலானவர்கள் விவசாயிகள். மேலும் ஆடு, மாடுகளும் வளர்த்து வருகிறார்கள். அதனால் அதிகாலையிலேயே எழுந்து தோட்டத்துக்கு செல்வார்கள்.இந்தநிலையில் நேற்று அதிகாலை 5¾ மணி அளவில் தாளவாடி மற்றும் திகினாரையை சேர்ந்த மக்கள் ரோட்டில் நடந்து சென்றுகொண்டு இருந்தார்கள். அப்போது வானத்தில் இருந்து நீளமான தீப்பிழம்பு வால் ஒன்று பூமியை நோக்கி வந்தது.

காட்டுக்குள் விழுந்தது

இதைப்பார்த்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். ஒரு சிலர் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தார்கள். இந்தநிலையில் வேகமாக வந்த தீப்பிழம்பு தாளவாடி வனப்பகுதிக்கும், ஆசனூர் வனப்பகுதிக்கும் இடைப்பட்ட இடத்தில் விழுந்தது. அது விழுந்த இடம் அடர்ந்த வனப்பகுதி என்பதால் கிராம மக்கள் யாரும் அருகே சென்று பார்க்கவில்லை.

இதுகுறித்து கிராம மக்கள் கூறும்போது, ‘அதிகாலை நேரம் பெரிய நெருப்பு வால் பூமியை நோக்கி வந்தது. சுமார் 2 நிமிடத்தில் அந்த நெருப்பு வால் காட்டுக்குள் விழுந்து விட்டது. அது என்ன? என்று தெரியவில்லை.

பறக்கும் தட்டா?

எங்களுக்கு பயமாக உள்ளது. அது எரிகல்லா? அல்லது ஏதோ வேற்று கிரக வாசிகள் இதுபோல் பறக்கும் தட்டில் வருவார்கள் என்று கூறுகிறார்கள் அதுவா? என்று தெரியவில்லை.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நெருப்பு வால் விழுந்த இடத்தில் சென்று பார்த்து உண்மையை கண்டறிந்து கூற வேண்டும். அப்போதுதான் எங்களுடைய பயம் போகும்‘ என்றார்கள்.

வானத்தில் இருந்து நெருப்புவால் விழுந்த சம்பவம் தாளவாடி, திகினாரை பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story