ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து


ஸ்ரீபெரும்புதூர் அருகே தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
x
தினத்தந்தி 22 May 2019 11:15 PM GMT (Updated: 22 May 2019 8:56 PM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர், 

ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாம்பாக்கம் சிப்காட் பகுதியில் அட்டை தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் உள்ள குடோனில் நேற்று காலை 9 மணியளவில் திடீரென்று தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து தொழிலாளர்கள் அலறியடித்து கொண்டு வெளியில் ஓடினர்.

இது குறித்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, ஒரகடம், காஞ்சீபுரம் போன்ற பகுதிகளில் இருந்து 5 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் 3 மணிநேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இருப்பினும் குடோனில் இருந்த லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்தில் ஏற்பட்ட கரும் புகையால் அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. கரும் புகையால் கண் எரிச்சல் ஏற்பட்டு வாகனஓட்டிகள் அவதிபட்டனர்.

இந்த தீ விபத்து குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரித்து வருகின்றனர்.

Next Story