தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி


தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
x
தினத்தந்தி 23 May 2019 10:45 PM GMT (Updated: 23 May 2019 9:07 PM GMT)

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும் என்று தர்மபுரியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

தர்மபுரி,

பாட்டாளி இளைஞர் சங்க தலைவரும், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி பா.ம.க. வேட்பாளருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ் தர்மபுரி ராஜாபேட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பா.ஜனதா தலைமையிலான ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பிரதமர் மோடிக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன். பிரதமர் மோடி இந்தியாவை வலிமைமிக்க வல்லரசாக மாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி தொடரும். தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் செந்தில்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

விவாதிப்போம்

எனக்கு வாக்களித்த மக்களுக்கும், கூட்டணி கட்சியினருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். கடந்த 5 ஆண்டுகளாக என்னை தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி பல்வேறு திட்டங்களை கொண்டு வருவதற்கு உறுதுணையாக இருந்த தர்மபுரி தொகுதி மக்களுக்கு மீண்டும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். தர்மபுரி மாவட்ட வளர்ச்சிக்கு நான் தொடர்ந்து பாடுபடுவேன். மாவட்டத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நான் குரல் கொடுப்பேன்.

தர்மபுரி மாவட்டத்தில் காவிரி உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவேன். தர்மபுரி-மொரப்பூர் ரெயில் பாதை இணைப்பு திட்டம், நீர் மேலாண்மை திட்டம், சிப்காட் தொழிற்பேட்டை ஆகியவற்றை நிறைவேற்ற நாங்கள் தொடர்ந்து பாடுபடுவோம்.நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தது குறித்து பா.ம.க.வின் உயர்நிலை குழு கூட்டத்தை கூட்டி விரைவில் விவாதிப்போம்.

தமிழகத்தின் நலனுக்காக பா.ம.க. தொடர்ந்து போராடும். இந்த நாட்டு மக்களுக்கு பல திட்டங்களை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்போம். கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் எம்.பி. செந்தில் மற்றும் கட்சி நிர்வாகிகள், உடனிருந்தனர்.

Next Story