தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வெற்றி


தட்டாஞ்சாவடி தொகுதியில் தி.மு.க. வெற்றி
x
தினத்தந்தி 24 May 2019 12:08 AM GMT (Updated: 24 May 2019 12:08 AM GMT)

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்றது.

புதுச்சேரி,

புதுச்சேரி தட்டாஞ்சாவடி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்த் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவரது எம்.எல்.ஏ. பதவி பறிபோனது. இதனால் அந்த இடம் காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தலுடன் சேர்த்து இந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் நெடுஞ்செழியன் (என்.ஆர்.காங்கிரஸ்), வெங்கடேசன்(தி.மு.க.), கவுரி (நாம் தமிழர் கட்சி), முருகசாமி (அ.ம.மு.க.) ஆகியோர் உள்பட 8 பேர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரி கட்டிடத்தில் நேற்று காலை தொடங்கியது. தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் நெடுஞ்செழியன்-52, வெங்கடேசன்-81, கவுரி-8, சுயேச்சைகளாக போட்டியிட்ட ரவிசங்கர்-2, ஸ்ரீதர்-2, தமிழமல்லன்-4 என பெற்று இருந்தனர். தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் 29 வாக்குகள் முன்னிலை பெற்றார்.

தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. முதல் சுற்றில் நெடுஞ்செழியன்-4945, வெங்கடேசன்-4773 ஆகிய வாக்குகளை பெற்றனர். முதல் சுற்றின் முடிவில் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். 2-வது சுற்று வாக்குகள் எண்ணப்பட்டது. அப்போது புதுப்பேட்டை வாக்குச்சாவடியில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரத்தை அதிகாரிகள் தவறுதலாக எடுத்து வந்து விட்டனர். இந்த விவரம் உடனே கண்டுபிடிக்கப்பட்டதையொட்டி அந்த வாக்குப்பதிவு எந்திரங்களை தவிர்த்து மற்ற வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

2-வது சுற்றின் முடிவில் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் 9,241 வாக்குகளும், என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் 8,253 வாக்குகளும் பெற்றனர். இந்த சுற்றில் தி.மு.க. 1,850 வாக்குகள் முன்னிலை பெற்றது.

இந்தநிலையில் புதுப்பேட்டை வாக்குச்சாவடி வாக்கு எந்திரத்தை தவிர்த்து மற்ற வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டதை அறிந்த என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளரின் முகவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதம் செய்து வாக்கு எண்ணும் அறையின் முன்பு தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் சூப்பிரண்டு செல்வம் மற்றும் போலீசார் சமரசம் பேசியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தினை கைவிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது. தொடர்ந்து புதுப்பேட்டை வாக்குச்சாவடிக்கான வாக்குகள் எண்ணப்பட்டன.

முடிவில் தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நெடுஞ்செழியனைவிட கூடுதலாக 1,539 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெங்கடேசன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

கட்சிகள் வாரியாக பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள்:-

22,985

பதிவான வாக்குகள்:-

22,332

வெங்கடேசன் (தி.மு.க.)

-10,905

நெடுஞ்செழியன்

(என்.ஆர்.காங்) - 9,367

கவுரி(நாம் தமிழர் கட்சி)

-1,084

தமிழமல்லன் (சுயே) - 269

முருகசாமி (அ.ம.மு.க.) -237

ரவிசங்கர் (புதுச்சேரி

வளர்ச்சி கட்சி) - 203

ஸ்ரீதர் (தமிழக வாழ்வுரிமை

கட்சி) - 195

மன்னாதன் (சுயே) -71

நோட்டா - 653

(நோட்டாவுக்கு விழுந்த வாக்குகளை விட அ.ம.மு.க. வேட்பாளர் குறைந்த வாக்குகளே பெற்று இருந்தார்.)

Next Story