வளசரவாக்கத்தில் வீட்டில் போதை பொருள் பதுக்கிய 5 பேர் கைது


வளசரவாக்கத்தில் வீட்டில் போதை பொருள் பதுக்கிய 5 பேர் கைது
x
தினத்தந்தி 24 May 2019 10:00 PM GMT (Updated: 24 May 2019 8:05 PM GMT)

வளசரவாக்கத்தில் வீட்டில் போதை பொருள் பதுக்கி வைத்து இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் தீர்த்தகிரி, ஜெயராமன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மாந்தோப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், குன்றத்தூர் நந்தம்பாக்கத்தை சேர்ந்த அமர்நாத் (வயது 25), சரவணன் (26) என்பது தெரிந்தது. போலீசாரிடம் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களிடம் சோதனை செய்தனர்.

அதில் அவர்களிடம் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் மேலும் போதை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வில்லிவாக்கத்தை சேர்ந்த முருகேசன் என்ற குமார் (33), தமிழ்வாணன் (47), சசிதரன் (29) ஆகிய மேலும் 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், ராமநாதபுரத்தில் இருந்து நண்பர்கள் மூலமாக அந்த போதைபொருட்கள் இவர்களுக்கு வந்ததாகவும், அதை இந்த வீட்டில் பதுக்கி வைத்து, இங்குள்ள நண்பர்களிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்க முயற்சி செய்ததும் தெரிந்தது. இவர்களிடம் இருந்து 10 கிலோ போதை பொருட்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 5 பேரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான போதை பொருள்? என்பதை கண்டறிய ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இவர்கள் இதற்கு முன்பு இதுபோல் போதை பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளனரா?. இவர்களுக்கு இந்த போதை பொருளை வினியோகம் செய்தது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story