தஞ்சையில் ஆட்டோ டிரைவர் வீட்டில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் சாம்பல்


தஞ்சையில் ஆட்டோ டிரைவர் வீட்டில் தீ விபத்து ரூ.2 லட்சம் பொருட்கள் சாம்பல்
x
தினத்தந்தி 25 May 2019 10:15 PM GMT (Updated: 25 May 2019 8:30 PM GMT)

தஞ்சையில் ஆட்டோ டிரைவர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் பொருட்கள் எரிந்து சாம்பலானது.

தஞ்சாவூர்,

தஞ்சை மேலஅலங்கம் கோட்டை மேடு பகுதியில் வசித்து வருபவர் மகேந்திரன்(வயது42). ஆட்டோ டிரைவர். இவர் பெரியகோட்டை சுவரில் கட்டப்பட்ட ஓட்டு வீட்டில் வசித்து வந்தார். கஜா புயலின் தாக்கத்தினால் ஓடுகள் உடைந்து, ஒரு பக்க சுவரும் இடிந்து விழுந்தது. அதன்பின்னர் புதிதாக குடிசை அமைத்து அந்த வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். அதே வீட்டில் பின்புறம் மகேந்திரனின் அண்ணி விஜயலட்சுமி தனது மகனுடன் வசித்து வந்தார்.

தஞ்சையில் நேற்று கருடசேவை உற்சவம் நடைபெற்றது. 24 பெருமாள்கள் கருடவாகனத்தில் எழுந்தருளி கீழவீதி, தெற்குவீதி, மேலவீதி, வடக்குவீதியில் வலம் வந்தனர். இதை பார்ப்பதற்காக மகேந்திரன் மற்றும் விஜயலட்சுமி குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இந்தநிலையில் திடீரென குடிசை வீடு தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மகேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர்.

பொருட்கள் சாம்பல்

மேலும் தஞ்சை தீயணைப்பு வீரர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீர் பீய்ச்சி தீயை அணைத்தனர். இருந்தாலும் வீட்டில் இருந்த ரூ.30 ஆயிரம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. சேத மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என தெரிகிறது.

இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்று உடனடியாக தெரியவில்லை. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என தஞ்சை மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story