ஆசனூரில் ஆலங்கட்டி மழை: சூறாவளிக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன மரம் ரோட்டில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு


ஆசனூரில் ஆலங்கட்டி மழை: சூறாவளிக்காற்றில் 2 வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன மரம் ரோட்டில் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 9:20 PM GMT)

ஆசனூரில் சூறாவளிக்காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் 2 வீடுகளின் மேற்கூரைகள் பறந்தன. இதேபோல் மரம் ஒன்று ரோட்டில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள ஆசனூரில் நேற்று வழக்கம் போல் வெயில் வாட்டி எடுத்தது. திடீரென மாலை 4.30 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமார் 30 நிமிடம் சூறாவளிக்காற்றுடன் வெளுத்து வாங்கியது. இதனால் ஆசனூர் அருகே எரகனள்ளியில் இருந்து தாளவாடி செல்லும் ரோட்டில் இருந்த பெரிய மரம் ஒன்று சாய்ந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது. இதில் மின்கம்பங்களும் சேதமடைந்தன.

மரம் ரோட்டில் விழுந்ததால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் மேற்கொண்டு செல்லமுடியாமல் இருபுறமும் அணிவகுத்து வரிசையாக நின்றன. இதுபற்றிய தகவல் கிடைத்தும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் நெடுஞ்சாலைப்பணியாளர்கள் அங்கு சென்று, ரோட்டில் விழுந்து கிடந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மரம் ரோட்டில் சாய்ந்து விழுந்ததால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஆசனூரில் உள்ள ஜடைசாமி (வயது 62) என்பவருடைய வீட்டின் மேற்கூரை, சூறாவளிக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் காற்றில் பறந்தது. அப்போது வீட்டில் இருந்த ஜடைசாமி மற்றும் அவருடைய உறவினர்கள் எந்தவித காயமுமின்றி உயிர்தப்பினார்கள். மேலும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ஜடைசாமி (52) என்பவரின் வீட்டின் மேற்கூரையும் காற்றில் பறந்தது. மேலும் வீட்டின் சுற்றுச்சுவரும் இடிந்து விழுந்தது. இதில் வீட்டில் இருந்த யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதேபோல் அரேபாளையம், கல்மண்டிபுரம், திகினாரை, மல்குத்திபுரம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டே இருந்தது.

டி.என்.பாளையம் அருகே உள்ள கடம்பூரில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை வெயில் கொளுத்தியது. திடீரென மாலை 3.30 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் இடி–மின்னலுடன் மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. மாலை 5 மணிக்கு மேல் சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது.

இதேபோல் அத்தியூர், பவளக்குட்டை, இருட்டிபாளையம், பசுவனாபுரம், கரளியம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை மழை வெளுத்து வாங்கியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். புஞ்சைபுளியம்பட்டியிலும் நேற்று மாலை 4.30 மணி முதல் 5 மணி வரை மழை வெளுத்து வாங்கியது.


Related Tags :
Next Story