மாரடைப்புக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் ஷாஜகான் மேல்சிகிச்சைக்காக சென்னை சென்றார்


மாரடைப்புக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் ஷாஜகான் மேல்சிகிச்சைக்காக சென்னை சென்றார்
x
தினத்தந்தி 25 May 2019 11:05 PM GMT (Updated: 25 May 2019 11:05 PM GMT)

மாரடைப்பு ஏற்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அமைச்சர் ஷாஜகான் மேல்சிகிச்சைக்காக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் வருவாய் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்து வருபவர் ஷாஜகான். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அவர் உடனடியாக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சுகாதாரத்துறை இயக்குனர் ராமன் தலைமையில் இருதயநோய் பிரிவு டாக்டர்கள் அவரது உடல்நிலையை கண்காணித்து வந்தனர்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றமும் ஏற்பட்டது. இந்தநிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற அவரது குடும்பத்தினர் திட்டமிட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலையில் அப்போலோ மருத்துவமனைக்கு சொந்தமான ஆம்புலன்சு வரவழைக்கப்பட்ட அதில் அமைச்சர் ஷாஜகான் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருடன் அவரது குடும்பத்தினர் சென்றனர்.

இதற்கிடையே அமைச்சர் ஷாஜகான் உடல்நலம் குறித்து வதந்திகள் பரவின. இதன் காரணமாக அமைச்சரின் அலுவலகத்திலிருந்து செய்திக்குறிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

வருவாய்த்துறை அமைச்சர் உடல்நலக்குறைவு காரணமாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று குணமடைந்தார். மேலும் பரிசோதனைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளார். மக்கள் யாரும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story