சமூக வலைத்தளத்தில் அ.தி.மு.க., பா.ம.க.வை விமர்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிக்கு போலீசார் வலைவீச்சு


சமூக வலைத்தளத்தில் அ.தி.மு.க., பா.ம.க.வை விமர்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 26 May 2019 11:00 PM GMT (Updated: 26 May 2019 7:57 PM GMT)

சமூக வலைத்தளத்தில் அ.தி.மு.க., பா.ம.க.வை விமர்சித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

செந்துறை,

கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற போது செந்துறை அருகே உள்ள பொன்பரப்பியில் இரு கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஒரு சிலரின் வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த நிலையில் அரியலூர் மாவட்ட பகுதியை சேர்ந்த சிலர் ஒரு சமூகத்தினரை பற்றி இழிவாக பேசி சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் பா.ம.க.வினரை இழிவாக பேசி வீடியோ ஒன்று வெளியிட்டவரை கைது செய்யக்கோரி மீன்சுருட்டி போலீஸ் நிலையம் முன்பு பா.ம.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான நிலை ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள சிறுகடம்பூர் கிராமத்தை சேர்ந்தவர் தீரவளவன். செந்துறை ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர். இவர் அண்மையில் அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. குறித்து மோசமாக விமர்சனம் செய்து மோதலை ஏற்படுத்தும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அறிவாளை கையில் பிடித்து கொண்டு எடுக்கப்பட்ட படங்களையும் பதிவிட்டு மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் அப்பகுதியில் உள்ள இரு சமூகத்தினரிடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுகடம்பூர் கிராம நிர்வாக அதிகாரி கலைவாணன் இரும்புலிக்குறிச்சி போலீசாரிடம் தீரவளவன் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள தீரவளவனை வலைவீசிதேடி வருகின்றனர். இந்த நிலையில் சிறுகடம்பூர் பகுதியில் கலவரம் ஏற்படாமல் இருக்க அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story