திருப்பூரில் இருதரப்பினர் மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து; 8 பேர் கைது


திருப்பூரில் இருதரப்பினர் மோதலில் வாலிபருக்கு கத்திக்குத்து; 8 பேர் கைது
x
தினத்தந்தி 26 May 2019 11:00 PM GMT (Updated: 26 May 2019 9:54 PM GMT)

திருப்பூரில் இருதரப்பினர் மோதியதில் வாலிபருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் இருதரப்பை சேர்ந்த 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாஸ்கோ நகர் சாரதா நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மற்றும் அவருடைய நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த முகமது ரிபாஷ்(27), ரபீக்ராஜா(40), பாசில்ரகுமான்(19), சல்மான் ஜான்(19), அக்மல்(18), அம்ஜத்கான்(45) ஆகியோர் சேர்ந்து அப்பகுதியில் உள்ள அப்துல்ரகுமான்(29) என்பவரின் வீட்டுக்கு முன்பு நின்று கடந்த 24–ந் தேதி மாலை பேசிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது அங்கு வந்த அப்துல்ரகுமான் அவர்களிடம் தனது வீட்டு முன்பு நின்று பேசக்கூடாது என்று கூறியதுடன் தகாதவார்த்தையால் திட்டியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்துல்ரகுமான் தரப்பில் அதே பகுதியை சேர்ந்த ஆனந்த்(27), ஜெகதீஷ்(20), கோகுல்(19), நாகராஜ்(20) ஆகியோர் சேர்ந்து தட்டிக்கேட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டு மோதல் முற்றி ஒருவரையொருவர் கட்டையாலும், கைகளாலும் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் சிறுவனின் தரப்பினர் சேர்ந்து அப்துல்ரகுமானை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. மேலும் கட்டையால் தாக்கியதில் நாகராஜின் தலை உடைந்து ரத்தம் கொட்டியது. அதுபோல் அப்துல்ரகுமான் தரப்பினர் தாக்கியதில் சிறுவன் காயமடைந்தான்.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதுபோல் கத்திக்குத்தில் படுகாயமடைந்த அப்துல்ரகுமான் மற்றும் தலையில் காயமடைந்த நாகராஜ் ஆகிய 2 பேரையும் திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சிறுவன் கொடுத்த புகாரின் பேரில் ஆனந்த், ஜெகதீஷ், கோகுல் ஆகிய 3 பேரையும் அப்துல்ரகுமான் கொடுத்த புகாரின் பேரில் முகமது ரிபாஷ், ரபீக் ராஜா, சல்மான் ஜான், பாசில் ரகுமான், அக்மல் ஆகிய 5 பேரையும் திருப்பூர் வடக்கு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story