விஜயாப்புரா அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கிருஷ்ணா நதியில் குதித்த தம்பதி கணவர் சாவு-பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்


விஜயாப்புரா அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கிருஷ்ணா நதியில் குதித்த தம்பதி கணவர் சாவு-பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்
x
தினத்தந்தி 26 May 2019 10:02 PM GMT (Updated: 26 May 2019 10:02 PM GMT)

விஜயாப்புரா அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் கிருஷ்ணா நதியில் குதித்து தம்பதி தற்கொலைக்கு முயன்றனர். இதில் கணவர் இறந்தார். மனைவி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

விஜயாப்புரா,

பாகல்கோட்டை மாவட்டம் பீலகி தாலுகா தோலமட்டி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் மல்லப்பா. இவருடைய மனைவி மல்லம்மா. இந்த தம்பதிக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருப்பினும், இந்த தம்பதிக்கு குழந்தைகள் இல்லை.

இதனால் அவர்கள் மிகுந்த மனவருத்தத்தில் இருந்தனர். இதன் காரணமாக ரமேஷ் மல்லப்பா-மல்லம்மா தம்பதி தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி அவர்கள் 2 பேரும் நேற்று விஜயாப்புரா மாவட்டம் கொல்ஹாரா அருகே கிருஷ்ணா நதிக்கு மேல்புறம் செல்லும் மேம்பாலத்துக்கு சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் மேம்பாலத்தில் இருந்து நதிக்குள் குதித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மல்லம்மாவின் சேலை மேம்பாலத்தில் இருந்த கம்பியில் சிக்கி கொண்டது. இதனால் அவர் தண்ணீரில் விழவில்லை. மாறாக, ரமேஷ் மல்லப்பா தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார்.

இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து மல்லம்மாவை மீட்டனர். இருப்பினும் அவர் லேசான காயம் அடைந்திருந்தார். அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் தண்ணீரில் குதித்து தற்கொலை செய்து கொண்ட ரமேஷ் மல்லப்பாவின் உடலை தேடும் பணியை தீயணைப்பு வீரர்கள், போலீசார் தொடங்கி உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் கொல்ஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story