குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்


குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 27 May 2019 11:00 PM GMT (Updated: 27 May 2019 12:16 PM GMT)

திருவண்ணாமலை வேங்கிக்கால் மின்நகர் பகுதி 5–வது மற்றும் 6–வது தெருவில் கடந்த சில தினங்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

திருவண்ணாமலை, 

குடிநீர் கிடைக்காததால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்து உள்ளனர். இது குறித்து திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் வேங்கிக்கால் ஊராட்சி செயலாளரிடம் பல முறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த பெண்கள் உள்பட பொது மக்கள் நேற்று காலை வேங்கிக்கால் பூமாலை வணிக வளாகத்தின் அருகில் திருவண்ணாமலை –போளூர் சாலையில் காலி குடங்களுடன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ், வேங்கிக்கால் ஊராட்சி செயலாளர் உமாபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது வட்டார வளர்ச்சி அலுவலர் பிரகாஷ் உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதனையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story