தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடேசன் எம்.எல்.ஏ.வாக நாளை பதவியேற்கிறார் முதல்–அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்


தட்டாஞ்சாவடி தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடேசன் எம்.எல்.ஏ.வாக நாளை பதவியேற்கிறார் முதல்–அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
x
தினத்தந்தி 27 May 2019 10:45 PM GMT (Updated: 27 May 2019 7:38 PM GMT)

தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வெங்கடேசன் நாளை(புதன்கிழமை) எம்.எல்.ஏ.வாக பதவியேற்கிறார். அவர் நேற்று முதல்–அமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

புதுச்சேரி,

புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தி.மு.க. சார்பில் வெங்கடேசன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் மூலம் புதுச்சேரி சட்டசபையில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கடேசன் நாளை(புதன்கிழமை) எம்.எல்.ஏ.வாக பதவி ஏற்றுக்கொள்கிறார். இதற்கான விழா சட்டசபை வளாகத்தில் சபாநாயகர் அறைக்கு பின்புறம் நடைபெற உள்ளது. விழாவில் சபாநாயகர்(பொறுப்பு) சிவக்கொழுந்து அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முதல்–அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வெங்கடேசன் நேற்று காலை முதல்–அமைச்சர் நாராயணசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் வெற்றிக்காக உழைத்த கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கு நன்றியை தெரிவித்தார். அப்போது அவருடன் தி.மு.க. அமைப்பாளர்கள் சிவா, எஸ்.பி.சிவக்குமார், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story