ஈரோட்டில் பயங்கரம்; தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை


ஈரோட்டில் பயங்கரம்; தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை
x
தினத்தந்தி 28 May 2019 11:30 PM GMT (Updated: 28 May 2019 3:16 PM GMT)

ஈரோட்டில் தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாணிக்கம்பாளையம் நேதாஜிநகர் சுப்பிரமணிவலசு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 67). இவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி (55). இவர்களுக்கு விஜயலட்சுமி (36), சுப்புலட்சுமி (32) ஆகிய 2 மகள்களும், சிவக்குமார் (30) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் ராஜூ வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அதன்பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் ராஜூ இரவு வேலையும் சேர்த்து செய்வதாக வீட்டில் இருந்தவர்கள் நினைத்து கொண்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அருகில் உள்ள காலி இடத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது முதியவர் ஒருவர் ரத்தக்கறையுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததும், அவருடைய முகத்தில் காயங்கள் ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

விசாரணையில் இறந்தவர் ராஜூ என்பதும், அவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்கள் அவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதும் தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தை நுகர்ந்துவிட்டு சிறிது தூரத்தில் உள்ள ஒரு சுவர் வரை சென்று நின்றது. இதனால் கொலை செய்தவர்கள் அந்த வழியாக தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜூவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜூவை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story