ஜோதிடர் கொலை வழக்கில், கணவன்-மனைவி உள்பட 4 பேர் கோர்ட்டில் சரண்


ஜோதிடர் கொலை வழக்கில், கணவன்-மனைவி உள்பட 4 பேர் கோர்ட்டில் சரண்
x
தினத்தந்தி 28 May 2019 10:15 PM GMT (Updated: 28 May 2019 7:24 PM GMT)

கோவையில் நடந்த ஜோதிடர் கொலை வழக்கில் கணவன்- மனைவி உள்பட 4 பேர் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

கோவை,

கோவை தடாகம் ரோடு குமாரசாமி காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26), ஜோதிடர். இவர் ஒரு அரசியல் கட்சியில் பொறுப்பு வகித்துள்ளார். இவருடைய தூரத்து உறவினரான விஜயகுமாரும், அந்த கட்சியில் பிரமுகராக உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தோஷ் மற்றும் அவருடைய நண்பர்கள் சிலர் அந்த கட்சியில் இருந்து விலகி உள்ளளர்.

இதனால் அதிருப்தி அடைந்த விஜயகுமார் சந்தோசிடம், நீயும், உனது நண்பர்களும் மீண்டும் கட்சியில் சேர வேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். இதனால் அவர் கள் இருவருக்கும் இடை யே தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில், கடந்த 26-ந் தேதி சந்தோஷ் தனது தாயார் பிரேமலதாவுடன் மோட்டார் சைக்கிளில் வீரகேரளத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அவர்கள் இருவரும் நாகராஜபுரம் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல் அவர்களை வழிமறித்தது.

பின்னர் அந்த கும்பல் பிரேமலதா கண் முன்பே சந்தோசை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது. இதுகுறித்த புகாரின் பேரில் வடவள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அத்துடன் தப்பிச்சென்ற கும்பலை சேர்ந்தவர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கோவை ஏரிமேடு பகுதியை சேர்ந்த ஆறுமுகம் என்பவரை போலீசார் கைது செய்தனர். அத்துடன் தலைமறைவான விஜயகுமார், கரண், குண்டுரமேஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் வலைவீசி தேடி வந்தனர். இதற்கிடையே, இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான விஜயகுமார் (40), அவருடைய மனைவி மது (36), அவர்களுடைய மகன் கரண் (18) மற்றும் உறவினர் குண்டு ரமேஷ் ஆகியோர் நேற்று காலை கோவை 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்கள் 4 பேரையும் கோவை மத்திய சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அவர்கள் 4 பேரையும் பாதுகாப்பாக அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story