பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டல்: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு


பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டல்: கணவர் உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 28 May 2019 10:15 PM GMT (Updated: 28 May 2019 8:55 PM GMT)

பெண்ணிடம் வரதட்சணை கேட்டு மிரட்டிய கணவர் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

குளித்தலை,

குளித்தலை பெரியார் நகரை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகள் சுகுணாராணி (வயது 28). இவருக்கும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு பகுதியை சேர்ந்த மோகன் மகன் கார்த்திகேயன் என்பவருக்கும் கடந்த 2012-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. எம்.பி.ஏ. படித்துள்ள கார்த்திகேயன் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் சுகுணாராணி குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒரு புகார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

எங்களது திருமணத்தின் போது ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள வீட்டு உபயோகப்பொருட்களை எனது பெற்றோர் மாப்பிள்ளை வீட்டாருக்கு வாங்கி கொடுத்தனர். திருமணத்திற்கு பின்பு நாங்கள் கேரளாவில் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம். அப்போது வரதட்சணையாக 80 பவுன் நகை போடவேண்டுமென கார்த்திகேயன் வீட்டார் கேட்டனர். இதன்பிறகு நானும், கார்த்திகேயனும் பெங்களூருவில் தனியாக வசித்து வந்தோம்.

கொடுமை

அப்போது கார்த்திகேயன் தனது நண்பர்களுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். இந்த விவரம் எனக்கு தெரியவந்தது. இந்த நிலையில் கார்த்திகேயன் அவரது தாயார் பேச்சை கேட்டுக்கொண்டு என்னை அடிக்கடி திட்டி, அடித்து கொடுமைப்படுத்தி குளித்தலையில் உள்ள எனது பெற்றோரை வரவழைத்து அவர்களுடன் குளித்தலைக்கு அனுப்பி வைத்தார்.

இந்தநிலையில் என்னுடன் வாழ வேண்டும் என்றால் 100 பவுன் நகையுடன் வரவேண்டும். இல்லையெனில் விவாகரத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் என கூறி என்னை துன்புறுத்தினார். இது தொடர்பாக கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

3 பேர் மீது வழக்கு

இது தொடர்பாக விசாரணை நடத்த கோர்ட்டு குளித்தலை அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி கார்த்திகேயன், அவரது தந்தை மோகன், தாயார் ஜெயகுமாரி ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story