குழாய் உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி காலிக்குடங்களுடன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை


குழாய் உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி காலிக்குடங்களுடன், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 30 May 2019 10:45 PM GMT (Updated: 31 May 2019 12:14 AM GMT)

குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய வலியுறுத்தி காலிக்குடங்களுடன் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வடமதுரை,

அய்யலூரை அடுத்த சுக்காம்பட்டி ஊராட்சியில் எஸ்.குரும்பபட்டி, மாரியப்பபிள்ளைகளம், ஒண்டிபொம்மன்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கும் தண்ணீரை குழாய்கள் மூலம் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு வினியோகம் செய்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் மாரியப்பபிள்ளைகளம் பகுதியில் பதிக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயை உடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் எஸ்.குரும்பபட்டி, மாரியப்பபிள்ளைகளம், ஒண்டிபொம்மன்பட்டி பகுதிகளில் கடந்த 6 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் முத்துச்சாமி தலைமையில் காலிக்குடங்களுடன் வடமதுரை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது குழாயில் ஏற்பட்ட உடைப்பை உடனடியாக சரிசெய்து தங்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து தகவலறிந்த வடமதுரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வராஜ், குணவதி ஆகியோர் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உடனடியாக குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story