கச்சிராயப்பாளையம் அருகே, கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக மிதந்தார் - கொலையா? போலீசார் விசாரணை


கச்சிராயப்பாளையம் அருகே, கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக மிதந்தார் - கொலையா? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 31 May 2019 10:30 PM GMT (Updated: 31 May 2019 4:54 PM GMT)

கச்சிராயப்பாளையம் அருகே கல்லூரி மாணவி கிணற்றில் பிணமாக மிதந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சியை அடுத்த கச்சிராயப்பாளையம் அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் வேங்கமுத்து, தொழிலாளி. இவரது மகள் வீரம்மாள் (வயது 18). இவர் சின்னசேலம் அருகே உள்ள ஒரு தனியார் கலைக்கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்று தினசரி சாப்பாடு கொடுத்து விட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் நேற்று முன்தினம் மாலை வீரம்மாள், சாப்பாடு எடுத்துக் கொண்டு தனது பாட்டி வீட்டுக்கு சென்றார். ஆனால் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் வீரம்மாளை பல்வேறு இடங்களில் தேடினர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை வீரம்மாள் தனது பாட்டி வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போரின் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது.

இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ராமநாதன், கச்சிராயப்பாளையம் இன்ஸ்பெக்டர் வள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, கிணற்றில் பிணமாக மிதந்த வீரம்மாளை மீட்டு, அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் கச்சிராயப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வீரம்மாள் கிணற்றில் தவறி விழுந்து இறந்தாரா? அல்லது அவரை யாரேனும் கொலை செய்து உடலை கிணற்றில் வீசிச்சென்றனரா? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிணற்றில் கல்லூரி மாணவி பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story