விருத்தாசலத்தில் கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது


விருத்தாசலத்தில் கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவர் கைது
x
தினத்தந்தி 31 May 2019 9:45 PM GMT (Updated: 31 May 2019 11:41 PM GMT)

கணவன், மனைவியை பீர்பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் செல்வராஜ் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மனைவி மீனாட்சி (வயது 35). சம்பவத்தன்று இவர் தனது கணவர் வெங்கடேசனுடன் விருத்தாசலம் பஸ்நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் காட்டுமன்னார்கோவிலை சேர்ந்த வைத்திலிங்கம் மகன் மணிவண்ணன் (40) என்பவர் அங்கு வந்தார். அவர் திடீரென மீனாட்சியிடம் தகராறில் ஈடுபட்டார். தொடர்ந்து அவர் மீனாட்சியை ஆபாசமாக திட்டி பீர்பாட்டிலால் தாக்கினார். அதனை தடுக்க வந்த அவரது கணவர் வெங்கடேசனையும் மணிவண்ணன் தாக்கினார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவர்கள் 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story