ஈரோடு மாவட்டத்தில் திண்டல்-பெருந்துறையில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைக்க கோரிக்கை


ஈரோடு மாவட்டத்தில் திண்டல்-பெருந்துறையில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைக்க கோரிக்கை
x
தினத்தந்தி 1 Jun 2019 10:30 PM GMT (Updated: 1 Jun 2019 6:21 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் திண்டல் மற்றும் பெருந்துறை பகுதிகளில் கூடுதல் போலீஸ் நிலையங்கள் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் 42 போலீஸ் நிலையங்கள் உள்ளன. சட்டம்-ஒழுங்கு போலீஸ் நிலையங்கள் 38 மற்றும் மகளிர் போலீஸ் நிலையங்கள் 4-ம் செயல்பட்டு வருகின்றன.

ஈரோடு மாநகராட்சி பகுதியை பொறுத்தவரை ஈரோடு டவுன், ஈரோடு தெற்கு (சூரம்பட்டி), ஈரோடு வடக்கு (வீரப்பன்சத்திரம்), ஈரோடு தாலுகா(ரங்கம்பாளையம்), கருங்கல்பாளையம், அரசு தலைமை ஆஸ்பத்திரி ஆகிய 6 நிலையங்களும், ஒரு மகளிர் போலீஸ் நிலையமும் உள்ளது. இந்த 7 நிலையங்களும் டவுன் துணைக்கோட்டத்துக்கு உள்பட்டவையாகும். டவுன் உள்கோட்டத்தில் மொடக்குறிச்சி போலீஸ் நிலையமும் உள்ளது.

தற்போது ஈரோடு மாநகராட்சியின் விரிவாக்கம் காரணமாக மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. ஆனால், 6 போலீஸ் நிலையங்கள் போதுமானதாக இல்லை.

டவுன் துணைக்கோட்டத்தில் ஈரோடு தாலுகா, ஈரோடு வடக்கு ஆகிய போலீஸ் நிலையங்கள் அதிக பரப்பளவு கொண்ட போலீஸ் நிலையங்களாக உள்ளன. இதில் தாலுகா போலீஸ் நிலைய எல்லை சோலார் முதல் பெருந்துறை ரோடு வாய்க்கால்மேடு வரை உள்ளது. மிகப்பரந்த இந்த போலீஸ் நிலைய எல்லை பகுதியில் ஏதேனும் ஒரு இடத்தில் அசம்பாவிதங்கள் நடந்தால் அந்த இடத்துக்கு போலீசார் செல்லவே அதிக நேரம் ஆகிறது. இந்த கால தாமதத்தை போக்க திண்டல் பகுதியில் ஒரு போலீஸ் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. அதைத்தொடர்ந்து திண்டலில் போலீஸ் நிலையம் அமைக்க தேவையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன.

தாலுகா போலீஸ் நிலைய எல்லையில் பாதி அளவு, வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலைய எல்லையில் ஒரு பகுதி, பெருந்துறை போலீஸ் நிலைய எல்லையில் ஒரு பகுதி பிரிக்கப்பட்டு திண்டல் போலீஸ் நிலையம் உருவாக்க தேவையான அனைத்து பூர்வாங்க பணிகளும் நிறைவடைந்து இருக்கிறது. இது தொடர்பாக ஈரோடு மாவட்ட போலீஸ் நிர்வாகம் மூலம் உயர் அதிகாரிகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்து பல ஆண்டுகள் ஆகியும் திண்டல் போலீஸ் நிலையத்துக்கான அனுமதி கிடப்பில் போடப்பட்டு இருக்கிறது.

மொடக்குறிச்சி, சூரம்பட்டி, தாலுகா போலீஸ் நிலையங்களை பிரித்து சோலார் பகுதியில் புதிதாக போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து உள்ளது.

திண்டல் மற்றும் சோலாரில் போலீஸ் நிலையங்கள் அமைந்தால் ஈரோடு மாநகர் பகுதிக்கு கூடுதலாக போலீசார் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும். குற்றவழக்குகளை விசாரிக்கவும், ரோந்து பணிகளில் ஈடுபடவும் வசதியாக இருக்கும்.

இதுபோல் பெருந்துறையில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கடந்த பல ஆண்டுகளாக கண்டுகொள்ளப்படாமல் உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு, பவானி, கோபி, சத்தியமங்கலம் ஆகிய 4 மகளிர் போலீஸ் நிலையங்கள் உள்ளன. இதில் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையம் ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி, பெருந்துறை ஆகிய 4 தாலுகா பகுதிகளுக்கு ஒரே நிலையமாக உள்ளது. சென்னிமலை முதல் கொடுமுடி வரை 16 போலீஸ் நிலைய எல்லை பகுதிகளுக்கு உள்பட்ட மக்கள், ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தைதான் நாட வேண்டியது உள்ளது.

ஆனால், ஈரோடு போலீஸ் நிலையத்தில் ஒரு பெண் இன்ஸ்பெக்டர் உள்பட 10-க்கும் குறைவான போலீசாரே பணியில் உள்ளனர். மகளிருக்கு எதிரான அனைத்து பிரச்சினைகள், சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட வழக்குகளை விசாரித்து வழக்குப்பதிவு செய்து கோர்ட்டில் வழக்கு தொடர்வது வரை உள்ள பணிகளை மகளிர் போலீஸ் நிலைய போலீசார்தான் மேற்கொள்ள வேண்டும்.

இதுதவிர தினசரி வரும் காதல் திருமண வழக்குகள், சிறு குடும்ப பிரச்சினைகள் அனைத்தையும் எதிர்கொண்டு விசாரிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், ஈரோடு டவுன் துணைக்கோட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பாதுகாப்பு, பெண் குற்றவாளிகள் விசாரணை உள்ளிட்ட பணிகளுக்கும் மகளிர் போலீஸ் நிலைய பெண் போலீசார்தான் செல்ல வேண்டியது உள்ளது. எனவே ஈரோடு மகளிர் போலீஸ் நிலைய பணி என்றால் பெண் போலீசார் வேண்டவே வேண்டாம் என்று ஓடும் நிலை இருக்கிறது.

பெருந்துறை துணைக்கோட்டத்துக்கு உள்பட்ட மகளிர் தொடர்பான வழக்குகளை விசாரிக்க, பெருந்துறையில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை சில ஆண்டுகளுக்கு முன்பு எழுந்தது. பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ தோப்பு என்.டி.வெங்கடாசலம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி பல முறை மனுக்கள் அளித்து இருக்கிறார். ஆனால் அரசு சார்பில் இது கண்டுகொள்ளப்படாத மனுவாகவே இருக்கிறது.

பெருந்துறையில் மகளிர் போலீஸ் நிலையம் கொண்டு வரப்பட்டால் ஈரோடு மகளிர் போலீஸ் நிலையத்தின் பணிச்சுமை பாதியாக குறையும்.

இதுபற்றி போலீஸ் துறையை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:-

திண்டல் போலீஸ் நிலையம் தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் முடிந்து விட்டன. உயர் அதிகாரிகளின் ஒப்புதல் மட்டுமே தேவை. சோலார் மட்டுமின்றி தேவைக்கு ஏற்ப இன்னும் சில போலீஸ் நிலையங்கள் உருவாக்கப்பட்டால் நகர் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடியும். திண்டல் போலீஸ் நிலைய உருவாக்கும் திட்டம் சுமார் 10 ஆண்டுகளாக உள்ளது. ஆனால், நாமக்கல் மாவட்டத்தில் வெப்படையில் ஒரு புதிய போலீஸ் நிலையம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த உடனேயே அங்குள்ள மக்கள் பிரதிகள் அரசுக்கு கொடுத்த அழுத்தம் காரணமாக அங்கு புதிய போலீஸ் நிலையம் திறக்கப்பட்டு உள்ளது. ஆனால், ஈரோட்டில் புதிய போலீஸ் நிலையம் வேண்டி யாரும் சரியாக அரசுக்கு வலியுறுத்தவில்லை என்பதே தாமதத்துக்கு காரணம். இதுபோல் பெருந்துறையில் மகளிர் போலீஸ் நிலையம் அமைக்க, அரசுக்கு தேவையான நிலம் ஏராளமாக உள்ளது. அங்கு தற்போதைய எம்.எல்.ஏ. பல முறை வலியுறுத்தியும் அரசு அதற்கான நடவடிக்கைகள் எடுக்க செவிசாய்க்கவில்லை. நாளுக்கு நாள் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், போலீஸ் நிலையங்களில் போலீசாரின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது. இதை உணர்ந்து போலீஸ் அதிகாரிகளும், மக்கள் பிரதிநிதிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story