கும்பகோணத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்


கும்பகோணத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 1 Jun 2019 10:45 PM GMT (Updated: 1 Jun 2019 7:08 PM GMT)

கும்பகோணத்தில் குறுவை சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கும்பகோணம்,

காவிரி தண்ணீர் ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவதற்கான வாய்ப்புகள் இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையில் கும்பகோணத்தை சுற்றியுள்ள தாராசுரம், பம்பப்படையூர், ஆரியப்படையூர், கொற்கை, மாங்குடி ஆகிய பகுதிகளில் பம்பு செட் தண்ணீர் மூலம் குறுவை சாகுபடி பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக நடவு வயல்களை டிராக்டர்களை கொண்டு உழவு செய்யும் பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து மாங்குடி பகுதியை சேர்ந்த விவசாயி சுதாகர் கூறியதாவது:-

ஆண்டுதோறும் ஜூன் மாதம் 2-ம் வாரத்தில் குறுவை சாகுபடிக்காக விதை விட தொடங்குவோம். ஆனால் இந்த ஆண்டு 20 நாட்களுக்கு முன்னதாகவே வேலைகளை ஆரம்பித்துவிட்டோம். குறுவை சாகுபடிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏ.டி.டி.43 ரக நெல்லை விதை விட்டுள்ளேன். இதன் மூலம் குறுவை சாகுபடி ஆகஸ்டு மாத இறுதிக்குள் எங்களது நிலங்களில் முடிந்து விடும். பின்னர் சம்பா பருவம் தொடங்கிவிடும். சம்பா சாகுபடியை சிறப்பாக செய்ய குறுவை பருவத்திற்காக சாகுபடியை முன்கூட்டியே செய்ய உள்ளேன்.

மேலும் என்னிடம் உள்ள மின்சார பம்பு செட் மூலம் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகிறேன். கடும் வெயில் காரணமாக நிலம் தண்ணீரை உடனே உறிஞ்சி விடுகிறது. நிலத்தில் உள்ள புழுதியை உழவு அடித்து சேர் மண்ணாக மாற்றி விட்டால் தண்ணீரை நிலம் உறிஞ்சாது. ஆகையால் ஒரே நாளில் 2 டிராக்டர்களை கொண்டு நடவு வயலை உழவு செய்து தண்ணீர் நிற்கும்படி தயார் செய்து வருகிறேன். இன்னும் ஒரு சில நாட்களில் நடவு பணிகளை தொடங்க உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story