கோடை விடுமுறைக்கு பின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்


கோடை விடுமுறைக்கு பின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் வந்தனர்
x
தினத்தந்தி 3 Jun 2019 10:45 PM GMT (Updated: 3 Jun 2019 8:04 PM GMT)

கோடை விடுமுறைக்கு பின் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டன. இதையொட்டி மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், நகராட்சி பள்ளிகள் கோடை விடு முறைக்கு பின் நேற்று திறக்கப்பட்டன. இதையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் நேற்று முன்தினமே பள்ளி செல்வதற்கான ஆயத்தங்களை செய்திருந்தனர். நேற்று காலை எழுந்ததும் குளித்து விட்டு சீருடை உள்ள மாணவ, மாணவிகள் சீருடை அணிந்து கொண்டும், சீருடை இல்லாத மாணவ, மாணவிகள் தங்களுக்கு பிடித்த ஆடைகளை அணிந்து கடவுளை வணங்கி பெற்றோர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொண்டு உற்சாகத்துடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றனர்.

இதையடுத்து பள்ளிகள் நேற்று காலை இறைவணக்கத்துடன் தொடங்கின. மேலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளிக்கு வந்த புதிய மாணவ, மாணவிகளை சக மாணவிகள் பூ கொடுத்தும், இனிப்புகளை வழங்கியும் வரவேற்றனர். மேலும் தங்களது நண்பர்களை சந்தித்து ஒருவருக்கு ஒருவர் கைக்கொடுத்தும், கட்டித்தழுவியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் நர்சரி பள்ளிகளில் குழந்தைகளை விட்டு செல்வதற்கு பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டனர். பல குழந்தைகள் தங்கள் பெற்றோரை பிரிந்து செல்ல விடாமல் நடுரோட்டில் அழுது புரண்ட காட்சிகளையும் பல்வேறு பள்ளிகளில் காண முடிந்தது. அவர்களை பெற்றோர்கள் சமாதானப்படுத்தி பள்ளியில் விட்டு சென்றனர். மேலும் விடுதிகளில் தங்கி பயிலும் சில மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் பெட்டி, படுக்கைகளுடன் வந்திருந்தனர்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டையில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று எல்.கே.ஜி., யூ.கே.ஜி.க்கு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.வி.எஸ். ஜெயக்குமார் கலந்து கொண்டு மாணவர்கள் சேர்க்கையை தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் பலூன்களை வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர். இதில் புதிதாக 60 மாணவர்கள் சேர்ந்து உள்ளனர்.

தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா புத்தகங்களை வழங்கினார். இதில் வட்டார கல்வி அதிகாரி மகேஸ்வரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளியின் தலைமை ஆசிரியர் விஜயமாணிக்கம் நன்றி கூறினார். இதேபோல புதுக்கோட்டையில் உள்ள ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட பல்வேறு பகுதிகளில் புதிதாக பள்ளியில் சேர்ந்து நேற்று வகுப்புகளுக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோல பெருங்களூர் அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி வனஜா பாடப்புத்தகங்களை வழங்கினார்.

அன்னவாசல் பகுதியில் கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் நேற்று திறக்கப் பட்டன. இதையடுத்து முக்கண்ணாமலைப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளிக்கு மாணவ-மாணவிகள் உற்சாகமாக சென்றனர். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் புதிய வகுப்புக்கு செல்ல போகிறோம் என்ற உற்சாகத்துடனும், தங்கள் நண்பர்கள் மற்றும் தோழிகளை பார்க்க போகிறோம் என்ற சந்தோஷத்துடனும் சிரித்தபடியே பள்ளிக்கு சென்றனர். தொடர்ந்து நேற்று மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன.

கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், கீரமங்கலம் கொடிக்கரம்பை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இளைஞர் பெருமன்றம் சார்பில் மரக்கன்றுகள் வழங்கி வரவேற்பு கொடுத்தனர். மேலும் கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டன. இதேபோல கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிதாக பல மாணவ, மாணவிகளை பெற்றோர்கள் ஆர்வத்துடன் சேர்த்தனர். அப்போது புதிய மாணவர்கள் சேர்க்கப்பட்டவுடன் புதிய புத்தகத்துடன் மரக்கன்றுகளும் வழங்கப்பட்டன.

இது குறித்து மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கி வரவேற்ற இளைஞர்கள் கூறுகையில், இன்றைய நிலையில் மரங்களில் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதனால் தான் கிராமங்கள் தோறும் மரக் கன்றுகளை நடவு செய்து பராமரித்து வருகிறோம். அதே போல பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் மரம் வளர்ப்பு என்ற எண்ணம் வளர வேண்டும் என்பதால் பள்ளி திறப்பின் முதல் நாளில் அவர்களை வரவேற்று மரக்கன்றுகளை வழங்கி உள்ளோம். அதே போல புதிய மாணவர்களுக்கும் வழங்கி இருக்கிறோம். இந்த கன்றுகளை இந்த மாணவர்கள் நிச்சயம் வளர்த்துவிடுவார்கள். பின்னாளில் இந்த மரங்களே இவர்களின் உயர் படிப்புக்கு உதவும் என்றனர்.

Next Story