ஓமலூர் அருகே, முன்விரோதத்தில் வாலிபரின் முதுகில் கோணி ஊசியால் குத்தி சித்ரவதை: அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் மீது வழக்கு


ஓமலூர் அருகே, முன்விரோதத்தில் வாலிபரின் முதுகில் கோணி ஊசியால் குத்தி சித்ரவதை: அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 4 Jun 2019 10:34 PM GMT (Updated: 4 Jun 2019 10:34 PM GMT)

ஓமலூர் அருகே முன்விரோதத்தில் வாலிபரின் முதுகில் கோணி ஊசியால் குத்தி சித்ரவதை செய்த அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

ஓமலூர்,

சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த தும்பிபாடி ஊராட்சி ரெட்டியூர் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுடைய மகன் ஹரிகரன் (வயது 19). இவர் ஐ.டி.ஐ. தொழிற்பயிற்சி முடித்துள்ளார்.

இந்த நிலையில் ஹரிகரனின் சித்தி மகள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு ரெட்டியூருக்கு வந்துள்ளார். அங்கு ஹரிகரனின் வீட்டில் தங்கி இருந்த அந்த பெண்ணை, அருகில் உள்ள வீட்டில் வசிக்கும் ரஞ்சித் (25) என்பவர் செல்போனில் புகைப்படம் எடுத்ததாக தெரிகிறது. இதனால் அவருக்கும், ஹரிகரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹரிகரன் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலத்துக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த ரஞ்சித்தும், அவருடைய தம்பி ராஜேஷ்(20), இவர்களின் நண்பரான அதே பகுதியை சேர்ந்த செல்வ அரசன்(22) ஆகியோர் ஹரிகரனை தாக்கி உள்ளனர். மேலும் கோணி ஊசியால் ஹரிகரனின் முதுகில் சரமாரியாக குத்தி காயம் ஏற்படுத்தி சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. இதில் காயம் அடைந்த ஹரிகரன், ஓமலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் ராஜேஷ் உள்பட 3 பேர் மீது தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story