இரட்டை தலைமை குறித்த ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கருத்து சரியானது திவாகரன் பேட்டி


இரட்டை தலைமை குறித்த ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கருத்து சரியானது திவாகரன் பேட்டி
x
தினத்தந்தி 10 Jun 2019 11:15 PM GMT (Updated: 10 Jun 2019 6:36 PM GMT)

இரட்டை தலைமை குறித்த ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறிய கருத்து சரியானது என அண்ணா திராவிடர் கழக பொதுச்செயலாளர் திவாகரன் கூறினார்.

மன்னார்குடி,

சென்ற வாரம் மத்திய தேர்தல் ஆணையத்தால் அண்ணா திராவிடர் கழகம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மிகப் பெரிய இந்திய அரசியல் ஆளுமையான அண்ணாவின் பெயரை தாங்கியுள்ளதால் மொழி மற்றும் சமுதாயத்திற்கான அதி உன்னத லட்சியம் மற்றும் கொள்கைகளை நாங்கள் தாங்கி நிற்கிறோம்.

ஹைட்ரோ கார்பன், கெயில் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்திற்கு அண்ணா திராவிடர் கழகம் ஆதரவு அளிக்கும். நீர் மேலாண்மையை சரிவர கையாளும் திறமை தற்போதைய அரசுக்கு கிடையாது. 25 டி.எம்.சி. நீர் தேவையுள்ள சென்னையில் ஆண்டுக்கு 125 டி.எம்.சி மழை நீரை நாம் வீணாக்குகிறோம்.

அமைச்சர்கள், அவர்கள் பதவிக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும். தற்போதைய அரசு குறித்து அ.தி.மு.க.வினர், தங்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேச முன்வர வேண்டும். ஜெயலலிதா மறைந்தபோதே அ.தி.மு.க.விற்கு நெருக்கடி காலம் தொடங்கி விட்டது. அ.தி.மு.க.வின் வீழ்ச்சியை ஒத்துக்கொண்டு அனைவரையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

தப்பான வழிகாட்டுதலால் சசிகலாவை சிறைக்கு அனுப்பியவர் தினகரன். நடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள், சொந்தங்களுக்கே சீட் வழங்கப்பட்டது. எனவே அ.தி.மு.க.வினர் விழித்துக்கொள்ள வேண்டும். இதுபோன்று தொடர்ந்து நடந்தால் அ.தி.மு.க. சரிவையே சந்திக்கும். சசிகலாவினால் தக்க வைக்கப்பட்ட அ.தி.மு.க அரசு தான் இன்று நடந்து வருகிறது.

அ.தி.மு.க.விற்கு ஆளும் கட்சி என்ற தகுதியை தவிர வேறு என்ன தகுதி உள்ளது? மத்திய அரசை கண்டு பயப்படுபவர்கள், ஆட்சியில் இருந்து விலக வேண்டும். இரட்டை தலைமை குறித்து ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறிய கருத்து சரியானதுதான். அ.தி.மு.க. தொண்டர்கள் இதுகுறித்து சிந்திக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story