5 கிராமங்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு


5 கிராமங்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்யக்கோரி பொதுமக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 10 Jun 2019 10:45 PM GMT (Updated: 10 Jun 2019 7:42 PM GMT)

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் நடந்தது. அப்போது உடையார்பாளையம் தாலுகா அம்பாபூர் அருகே உள்ள பெருமாள் தீயனூர் கிராம பொதுமக்கள் கலெக்டரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில், எங்கள் கிராமத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில், மது பிரியர்கள் மது வாங்கி குடித்து விட்டு அந்த வழியாக சென்று வருபவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த டாஸ்மாக்கடை வழியாக எங்கள் கிராமத்தில் இருந்தும், சுற்றியுள்ள செங்குழி, மலைமேடு, பட்டகட்டாங்குறிச்சி, உடையவரதீயனூர் ஆகிய கிராமங்களில் இருந்தும் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். சில சமயங்களில் மது பிரியர்கள் போதையில் பெண்களிடம் தகாத வார்த்தைகளை பேசியும், பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபடுகின்றனர். எனவே 5 கிராம பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள இந்த டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கூட்டத்தில், கலெக்டர் விஜயட்சுமி பொதுமக்களிடம் இருந்து முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், திருமண நிதியுதவித் திட்டம் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 373 மனுக்களை பெற்று கொண்டார். அந்த மனுக்கள் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு, மாவட்ட வழங்கல் அதிகாரி ரவிசந்திரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story