பெட்டிக்கடைகளில் மது விற்பனை: கறம்பக்குடி போலீஸ் நிலையம் முன்பு பெண்கள் தர்ணாவில் ஈடுபட முயற்சி


பெட்டிக்கடைகளில் மது விற்பனை: கறம்பக்குடி போலீஸ் நிலையம் முன்பு பெண்கள் தர்ணாவில் ஈடுபட முயற்சி
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 8:06 PM GMT)

பெட்டிக்கடைகளில் மதுவிற்பனையை தடுக்கக்கோரி, கறம்பக்குடி போலீஸ் நிலையம் முன்பு பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே ராங்கியன் விடுதி உள்ளது. இங்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அரசு டாஸ்மாக் மது கடை திறக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் புதுக்கோட்டை, கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து ராங்கியன் விடுதியில் மதுக்கடை அமைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2 மாதத்திற்கு மேலாக ராங்கியன் விடுதி பகுதியில் பெட்டிக்கடைகளில் வைத்து மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் செய்தும், எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மகளிர் சுய உதவிக்குழு பெண்கள், நேற்று கறம்பக்குடி போலீஸ் நிலையம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மதுவால் பெண்களின் வாழ்க்கையே சீரழிந்து விட்டது என்பதால் தான் ராங்கியன் விடுதியில் மதுக்கடை வராமல் தடுத்தோம். ஆனால் ஆங்காங்கே மதுவிற்பனையை போலீசார் கண்டு கொள்வதில்லை என ஆவேசமாக குரல் எழுப்பினர். பின்னர் அவர்களை சமாதானப்படுத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன், மது விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினார். இதையடுத்து அவரிடம் மனு கொடுத்துவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story