குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு


குறைதீர்க்கும் கூட்டம்: குடிநீர் கேட்டு கிராம மக்கள் கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 10 Jun 2019 11:00 PM GMT (Updated: 10 Jun 2019 8:22 PM GMT)

கரூரில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் குடிநீர்கேட்டு கிராமமக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

கரூர்,

கரூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் அடிப்படை வசதிகள் ஆகியவை தொடர்பான மனுக்களை பெற்றார். இந்த மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு அரசு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

குடிநீர்கேட்டு மனு

கரூர் மாவட்டம் வெள்ளியணை தென்பாகம், ஜல்லிபட்டி, மேக்காலூர் கிராம மக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில், எங்கள் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் தூர்ந்து போய்விட்டதால், அதிலிருந்து தண்ணீர் பெற முடியாத நிலை உள்ளது. மேலும் தெருக் குழாய்களிலும் சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. அடிபம்பு, ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டிகளும் பழுதடைந்து உள்ளன. எனவே எங்கள் பகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காண்பதோடு, சீராக குடிநீர் வினியோகம் செய்யப்பட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

இதேபோல், கிருஷ்ணராயபுரம் தாலுகா வளையல்காரன்புதூர் அண்ணாநகர் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்து கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் கடந்த சில மாதங்களாக வே சரிவர குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் வேலைக்கு செல்வோர், பள்ளி-கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சீராக குடிநீர் வினியோகிக்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தனர்.

வேலை வாங்கி தருவதாக மோசடிபுகார்

கடவூர் ஊராட்சி ஒன்றியம் தெற்கு அய்யம்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் பகுதியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்களின் வருகை பதிவேடுகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை. பணித்தள பொறுப்பாளர்கள் அவர்களது உறவினர்களுக்கு பணி வழங்குவதிலே முன்னுரிமை கொடுக்கின்றனர். எனவே இது குறித்து அதிகாரிகள் விசாரித்து உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

கரூர், கிருஷ்ணராயபுரம், மாயனூர், குளித்தலையை சேர்ந்த இளைஞர்கள் சிலர் திரண்டு வந்து கொடுத்த மனுவில், கரூர் அருகேயுள்ள மேட்டுத்திருக்காம்புலியூரை சேர்ந்த தி.மு.க. நிர்வாகி ஒருவர், எங்களுக்கு வங்கியில் கடன் பெற்று தருவதாகவும், சென்னையிலுள்ள சாப்ட்வேர் கம்பெனியில் வேலை வாங்கி தருவதாகவும் ஆசைவார்த்தைகள் கூறி பணம் பெற்றார். ஆனால் அவர் கூறியதன்பேரில் கடனோ, வேலையோ வாங்கி தரவில்லை. இந்த நிலையில் எங்களை ஏமாற்றி விட்டு அந்த நபர் வெளிநாட்டிற்கு தப்பி செல்ல முயற்சிக்கிறார். எனவே அவரது பாஸ்போர்ட்டை முடக்கி அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்து எங்களது பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பஞ்சப்பட்டி ஏரிக்கு தண்ணீர் வருமா?

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கரூர் மாவட்ட தலைவர் தங்கவேல் உள்பட விவசாயிகள் அளித்த மனுவில், கடவூர், பஞ்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தற்போது தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே இதனை தீர்க்கும் பொருட்டு வருகிற காலங்களில் காவிரியாற்றில் செல்லும் உபரிநீரை பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய்கள் மூலம் கொண்டு வந்து சேகரிக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தனர்.

சாமானிய மக்கள் நலக்கட்சியின் கரூர் மாவட்ட செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர், தாந்தோன்றிமலை ராஜவாய்க்காலை காணவில்லை... அதனை கண்டுபிடித்து தரவும்... என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகையினை கையில் பிடித்தபடி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அவர்கள் அளித்த மனுவில், கரூர் நகரில் ஓடும் அமராவதி ஆற்றின் கிளை வாய்க்காலான தாந்தோன்றிமலை ராஜவாய்க்காலானது ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டு காணாமல் போய்விட்டது. இதை இப்படியே விட்டு விட்டால் வெள்ளநீர் சுங்ககேட், திருமாநிலையூர் உள்ளிட்ட இடங்களுக்குள் புகுந்து விடும். எனவே அதிகாரிகள் தாந்தோன்றிமலை ராஜவாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தனர். மண்மங்கலம் ரெங்கநாதன்பேட்டையை சேர்ந்த சட்டபஞ்சாயத்து இயக்க உறுப்பினர் ஞானசேகர் அளித்த மனுவில், மண்மங்கலம் தாலுகா அலுவலகத்தில் செயல்படும் அரசு இ-சேவை மையத்தில் அச்சு எந்திரத்தில் கோளாறு உள்ளதால், சான்றிதழ்கள் தெளிவின்றி அச்சாகி வழங்கப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகின்றனர். எனவே அதனை சீர் செய்ய வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) செல்வசுரபி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி லீலாவதி, கலால்துறை உதவி ஆணையர் மீனாட்சி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி ஜான்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அதிகாரி கணேஷ் உள்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story