வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Jun 2019 11:13 PM GMT (Updated: 10 Jun 2019 11:13 PM GMT)

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் நடந்து உள்ளது.

பெங்களூரு,

பெங்களூரு பாப்பண்ணா கார்டன் அருகே சி.கே.அச்சுக்கட்டு பகுதியை சேர்ந்தவர் சீனிவாஸ். இவரது மனைவி பிரியங்கா(வயது 23). இந்த தம்பதிக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது சீனிவாசுக்கு, பிரியங்காவின் பெற்றோர் நகை, பணம் வரதட்சணையாக கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களாக கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி பிரியங்காவுக்கு, சீனிவாஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

ஆனால் வரதட்சணை வாங்கி வர பிரியங்கா மறுத்து உள்ளார். இதனால் சீனிவாசும், அவரது குடும்பத்தினரும் பிரியங்காவை கொடுமைப் படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட பிரியங்கா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்த சி.கே. அச்சுக்கட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரியங்காவின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது வரதட்சணை கொடுமையால் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. அதன்பின்னர் அவரது உடலை போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி பிரியங்காவை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் சீனிவாஸ், அவரது குடும்பத்தினர் மீது பிரியங்காவின் பெற்றோர் சி.கே.அச்சுக்கட்டு போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார் கள்.

வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story