புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ‘நிபா’ வைரஸ் அறிகுறியுடன் தொழிலாளி அனுமதி; தனி வார்டில் தீவிர சிகிச்சை


புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் ‘நிபா’ வைரஸ் அறிகுறியுடன் தொழிலாளி அனுமதி; தனி வார்டில் தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 11 Jun 2019 11:00 PM GMT (Updated: 11 Jun 2019 9:57 PM GMT)

‘நிபா’ வைரஸ் அறிகுறியுடன் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் தொழிலாளி ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனி வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

புதுச்சேரி,

கேரள மாநிலத்தில் ‘நிபா’ வைரஸ் காய்ச்சல் மீண்டும் பரவி வருகிறது. இது அருகில் உள்ள மற்ற மாநிலங்களுக்கு பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தில் தீராத காய்ச்சலுடன் ஆஸ்பத்திரிக்கு வருபவர்களுக்கு ரத்த பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதில் ‘நிபா’ வைரஸ் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக கோரிமேடு அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு 24 மணி நேரமும் டாக்டர்கள், நர்சுகள் பணியில் அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில் கடலூர் பகுதியை சேர்ந்த 58 வயது மதிக்கத்தக்க ஒருவர் கேரள மாநிலம் குருவாயூரில் கூலி வேலை செய்து வந்தார். அங்கு அவருக்கு கடந்த 3 நாட்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடும் காய்ச்சலால் அவதிப்பட்ட அவர் கடலூருக்கு திரும்பினார். இங்கு வந்த பிறகும் காய்ச்சல் தொடர்ந்ததால் புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் அவருக்கு ‘நிபா’ வைரஸ் தாக்கியதற்கான அறிகுறிகள் தென்பட்டன. உடனே அவர் ஜிப்மர் ஆஸ்பத்திரியில் உள்ள தனி வார்டில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்று (புதன் கிழமை) கிடைக்கும் என்று தெரிகிறது. இதில் அவருக்கு ‘நிபா’ வைரஸ் பாதித்து இருப்பது உறுதி செய்யப்பட்டால் தொடர்ந்து தனி வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும்.

‘நிபா’ வைரஸ் அருகில் உள்ளவர்களுக்கு எளிதாக பரவக் கூடியது. எனவே ஜிப்மரில் அனுமதிக்கப்பட்டுள்ளவரின் குடும்பத்தினர் மற்றும் அருகில் உள்ளவர்களுக்கும் இது போன்று பாதிப்புகள் உள்ளதா? என்று டாக்டர்கள் பரிசோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறைக்கு புதுவை ஜிப்மர் டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

Next Story