அரக்கோணம் சரகத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக 15 நாளில் 350 பேர் கைது - துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்


அரக்கோணம் சரகத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக 15 நாளில் 350 பேர் கைது - துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்
x
தினத்தந்தி 11 Jun 2019 10:29 PM GMT (Updated: 11 Jun 2019 10:29 PM GMT)

அரக்கோணம் சரகத்தில் பல்வேறு வழக்குகள் தொடர்பாக 15 நாட்களில் 350 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்தார்.

அரக்கோணம்,

அரக்கோணம் பகுதியில் உள்ள தக்கோலம், குருவராஜபேட்டை, அன்வர்திகான்பேட்டை, விண்டர்பேட்டை, பழனிப்பேட்டை மற்றும் அரக்கோணம் புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கொலை, கத்திக்குத்து சம்பவங்கள் அடிக்கடி தொடர்ந்து நடந்தன. அதிகரிக்கும் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையில் அரக்கோணம் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுநாத், மதியழகன் மற்றும் போலீசார் இடம் பெற்றிருந்தனர். இவர்கள் டவுன் பகுதியில் திவீர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

இவ்வாறு அவர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்ட 15 நாட்களில் அரசு சொத்திற்கு சேதம் ஏற்படுத்துதல், மணல் கடத்தல், மது, சாராயம் விற்றவர்கள் என 232 பேரை அவர்கள் கைது செய்துள்ளனர்.

மேலும் அரக்கோணம் சரகத்திற்குட்பட்ட அரக்கோணம் தாலுகா, நெமிலி, பாணாவரம், சோளிங்கர், காவேரிப்பாக்கம், கொண்டபாளையம், அவளூர், தக்கோலம் போன்ற பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து சென்று பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 350 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறுகையில், அரக்கோணம் சரகத்தில் போலீசார் ரோந்துப்பணியை அதிகரித்து உள்ளனர். இதன் காரணமாக கடந்த சில மாதங்களாக வழிப்பறி, செயின்பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபடுவது போன்ற சம்பவங்கள் வெகுவாக குறைந்து உள்ளது. போலீசாருடன் ரோந்து பணியில் சாரணர்கள், நண்பர்கள் குழுவினரும் ஈடுபட்டு வருகின்றனர். இதில் 350 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது மட்டுமில்லாமல் எனது தலைமையிலும் தனிப்படை போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அரக்கோணம் சரகத்தில் நடக்கும் திருட்டு, வழிப்பறி, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் குறித்து தகவல் தெரிந்தால் பொதுமக்கள் அது குறித்து உடனுக்குடன் அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும். எந்தெந்த தொலைபேசி எண்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்று அரக்கோணம், சாலை உள்ளிட்ட பகுதிகளில் போலீசாரின் எண்கள் குறித்த விவரங்கள் வைக்கப்பட்டு உள்ளது என்றார்.


Next Story