சங்கரன்கோவிலில் லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; எலக்ட்ரிக்கல் கடை ஊழியர் பலி


சங்கரன்கோவிலில் லாரி–மோட்டார் சைக்கிள் மோதல்; எலக்ட்ரிக்கல் கடை ஊழியர் பலி
x
தினத்தந்தி 12 Jun 2019 9:30 PM GMT (Updated: 12 Jun 2019 2:44 PM GMT)

சங்கரன்கோவிலில் லாரி–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் எலக்ட்ரிக்கல் கடை ஊழியர் உடல் நசுங்கி பலியானார்.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் லாரி–மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் எலக்ட்ரிக்கல் கடை ஊழியர் உடல் நசுங்கி பலியானார்.

எலக்ட்ரிக்கல் கடை ஊழியர் 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காயிதே மில்லத் 2–ம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல்காதர். இவருடைய மகன் தாரிக் (வயது 21). இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து விட்டு, சங்கரன்கோவிலில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று முன்தினம் மாலையில் வேலை முடிந்ததும், வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர், தன்னுடைய நண்பரான முகம்மதுவையும் (19) தனது மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார்.

லாரி மோதி உடல் நசுங்கி பலி 

சங்கரன்கோவில் நகரசபை அலுவலகம் அருகில் சென்றபோது, அந்த வழியாக சிமெண்டு மூட்டை லோடு ஏற்றிச் சென்ற லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் மீது மோதியது. இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட தாரிக்கின் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். முகம்மது லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.

விபத்து நிகழ்ந்ததும் லாரியை அங்கேயே நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும், சங்கரன்கோவில் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த தாரிக்கின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story