84 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்தனர் மாற்று சான்றிதழ் தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை


84 மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்ந்தனர் மாற்று சான்றிதழ் தர மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 5:47 PM GMT)

அரசு பள்ளிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் தர தனியார் பள்ளிகள் மறுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

ஆரணி, 

ஆரணி, அருணகிரிசத்திரம், கண்ணப்பன் தெருவில் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் புதிய மாணவர்களை சேர்க்கும் முயற்சியில் ஆரணி சிறு, குறு, பெரு வியாபார சங்க நிர்வாகிகள் ஈடுபட்டனர். அரசு பள்ளிகளில் சேர்ந்தால் மாணவர்களுக்கு இலவச சீருடை, புத்தகங்கள் அரசு சார்பிலேயே வழங்கப்படுகிறது என்பது குறித்தும் சலுகைகள் குறித்தும், கல்வி கட்டணம் செலுத்த தேவையில்லை என்பது குறித்தும் அவர்கள் விளக்கினர்.

இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை 28 மாணவர்களும், 6-ம் வகுப்பிலிருந்து 10-ம் வகுப்பு வரை 56 மாணவர்களும் என 2 பள்ளிகளிலும் மொத்தம் 84 மாணவர்கள் சேரும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

நகராட்சி ஆணையாளர் கு.அசோக்குமார், ஆரணி மாவட்ட கல்வி அலுவலர் த.சம்பத், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ரத்தினகுமார், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் பாலசுந்தரம், ஆரணி சிறு, குறு, பெரு வியாபாரிகள் சங்கத் தலைவர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை எம்.வசந்தா வரவேற்றார்.

தனியார் பள்ளிகளிலிருந்து அரசுப் பள்ளியில் இணைந்த மாணவர்களுக்கு முதன்மைக்கல்வி அலுவலர் வி.ஜெயக்குமார் பாடப் புத்தகங்களை வழங்கி அறிவுரைகள் வழங்கினார். முடிவில் ஆசிரியர் லட்சுமணன் நன்றி கூறினார்.

பின்னர் நிருபர்களிடம் முதன்மை கல்வி அலுவலர் கூறியதாவது:-

குழந்தைகளை ஆங்கில வழி பாடத் திட்டத்தில் சேர்க்க பெற்றோர்கள் தனியார் பள்ளிகளை நாடி செல்கிறார்கள். தொடர்ந்து அவர்களால் பணம் செலுத்த முடியாததால் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க முன் வருகின்றனர். ஆனால் தனியார் பள்ளி நிர்வாகிகள் பள்ளி மாற்று சான்றிதழை வழங்க மறுக்கிறார்கள் என புகார்கள் வருகின்றன.

இது போன்ற புகார்களை பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட தனியார் பள்ளிகள் மீது அளித்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆண்டு முதல் ஆரணி வட்டாரத்தில் 57 பள்ளிகளில் ஆங்கில வழிபாடத் திட்டங்கள் நடத்தப்படுகின்றன. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலமாக இவ்வாறு ஆங்கில வழி பாடங்கள் நடத்தப்படுகின்றன. அதற்காக மாணவர்களிடம் குறைந்த கட்டணம் பெற்று ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story