திருவையாறு அருகே பயங்கரம்: காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை


திருவையாறு அருகே பயங்கரம்: காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 12 Jun 2019 11:15 PM GMT (Updated: 12 Jun 2019 6:31 PM GMT)

திருவையாறு அருகே காதல் விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருவையாறு,

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள மணலூரை சேர்ந்தவர் வீரமணி. இவருடைய மகன் பிரசாந்த்(வயது 19). கட்டிட தொழிலாளி. இவர் பாபநாசம் பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியை காதலித்து வந்தார்.

இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசாந்த் காதலித்து வந்த சிறுமியை காணவில்லை.

இதனால் சிறுமியின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். எங்கு தேடியும் அந்த சிறுமி குறித்து எந்த தகவலும் அவர்களுக்கு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் தங்கள் மகளை பிரசாந்த் கடத்தி சென்று விட்டதாக சிறுமியின் பெற்றோர் அய்யம்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை திருவையாறு அருகே உள்ள பனவெளி கிராமம் வெட்டாறு தென்கரையில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. பிணமாக கிடந்தவரின் வாய் கட்டப்பட்டு இருந்தது. மேலும் பின் பக்க தலையில் பலமாக தாக்கப்பட்ட காயம் இருந்தது.இது குறித்து தகவல் அறிந்த நடுக்காவேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில் பிணமாக கிடந்தவர் மணலூர் பகுதியை சேர்ந்த பிரசாந்த் என்றும் அவர் காதல் தகராறில் அடித்துக்கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இதனைத்தொடர்ந்து பிரசாந்த் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்துக்கு தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியண்ணன், இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.மேலும் தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. மோப்ப நாய், பிரசாந்தின் உடல் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.

இது குறித்து நடுக்காவேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து உமையவள் ஆற்காட்டை சேர்ந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதல் தகராறில் வாலிபர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பனவெளி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பிரசாந்தின் சொந்த கிராமமான மணலூரில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஜெயச்சந்திரன், பெரியண்ணன் ஆகியோர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அனந்தபத்மநாபன், விஜயகுமார், சப்-இன்ஸ்பெக்டர் திருக்குமரன் உள்பட ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Next Story