வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியர் மீது துப்பாக்கி சூடு-அரிவாள் வெட்டு 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு


வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியர் மீது துப்பாக்கி சூடு-அரிவாள் வெட்டு 5 பேர் கொண்ட கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 12 Jun 2019 11:15 PM GMT (Updated: 12 Jun 2019 7:34 PM GMT)

கரூரில் நடந்த பணத்தகராறில் வீடு புகுந்து தனியார் நிறுவன ஊழியர் மீது துப்பாக்கி சூடு நடத்தியும் அரிவாளால் வெட்டி விட்டும் தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர்,

கரூர் வாங்கப்பாளையம் பூர்ணிமா கார்டன் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 32). இவர் தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வீட்டிற்கு வந்த அவர், தனது குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்.

அப்போது அங்கு 2 கார்களில் 5 பேர் கொண்ட கும்பல் வந்தது. வீட்டின் வளாகத்திற்குள் புகுந்த அந்த கும்பல், வாசலில் நின்று விக்னேஷ் பெயரை கூறி அழைத்தனர். அவர் சாப்பிட்டு கொண்டிருந்ததால் அவரது தந்தை லீலாகுமார் வெளியே வந்துள்ளார்.

அப்போது வாசலில் நின்று கொண்டிருந்த கும்பல் கைகளில் அரிவாள், துப்பாக்கி வைத்திருந்ததை கண்டு லீலாகுமார் அதிர்ச்சி அடைந்தார். அவர்களிடம் உங்களுக்கு யார் வேண்டும், இங்கு ஏன் வந்துள்ளீர்கள் என்று கேட்டுள்ளார்.

அதற்கு எந்த பதிலும் அவர்கள் கூறவில்லை. விக்னேசை கூப்பிடுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளனர். இதையடுத்து வீட்டிற்குள் இருந்த விக்னேஷ் வெளியே வந்தார். அப்போது திடீரென 5 பேரில் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் விக்னேசை நோக்கி சுட்டார். இதில் துப்பாக்கி குண்டு விக்னேஷ் மீது படவில்லை. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

இதையடுத்து அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் விக்னேசை வெட்ட முயன்றனர். மகன் மீது வெட்டுப்படாமல் இருக்க லீலாகுமார் தடுக்க முயன்றார். ஆனால் தந்தை மீது வெட்டுப்படாமல் இருக்க விக்னேஷ், லீலாகுமாரை தள்ளி விட்டார். இதில் விக்னேசின் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. இதனிடையே துப்பாக்கி சூடு சத்தம் கேட்டும், விக்னேஷின் அலறல் சத்தம் கேட்டும் அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர்.

பொதுமக்கள் வருவதை அறிந்ததும், அந்த கும்பல் அங்கிருந்த கார்களில் ஏறி தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். மேலும் விக்னேசை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விக்னேசை துப்பாக்கியால் சுட முயன்ற மர்மநபர்கள் யார்? எதற்காக இந்த செயலில் ஈடுபட்டனர் என போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின்முதல் கட்ட விசாரணையில், விக்னேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கரூர் வடிவேல்நகரை சேர்ந்த சக்திவேல் என்பவரின் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார்.

அப்போது இருவரும் சேர்ந்து வெள்ளியை நகைகளாக தயாரித்து நகைக்கடைகளுக்கு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர். இந்தநிலையில் நகைகளை கடைகளுக்கு சரியாக கொடுக்காமல் 2 பேரும் மோசடி செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக சேலம் போலீஸ் நிலையத்தில் 2 பேர் மீதும் வழக்குகள் உள்ளன.

இதையடுத்து சக்திவேலின் நிதி நிறுவனத்தில் இருந்து விலகி, திருப்பூர் மாவட்டம் மூலனூரை சேர்ந்த ஜெகன் என்பவரின் நிதி நிறுவனத்தில் விக்னேஷ் வேலைக்கு சேர்ந்தார். இதனிடையே விக்னேசுக்கும், சக்திவேலுக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினை தொடர்ந்து இருந்து வந்துள்ளது. அடிக்கடி தகராறும் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் திருப்பூர் மூலனூரில் விக்னேஷ் வேலைபார்த்து வரும் நிதி நிறுவனத்திற்கு சக்திவேல் சென்றுள்ளார். அங்கிருந்த ஜெகனிடம் எப்படி விக்னேசை வேலைக்கு சேர்த்து கொள்ளலாம் என்று கூறி, அவரையும் துப்பாக்கியால் சுட்டு மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஜெகன் கொடுத்த புகாரின்பேரில் மூலனூர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் தான் நேற்று முன்தினம் இரவும், சக்திவேல் அவரது ஆதரவாளர்களுடன் கரூரில் உள்ள விக்னேஷ் வீட்டிற்கு சென்று துப்பாக்கியால் சுட்டு மிரட்டியுள்ளனர். சக்திவேல் வைத்திருந்த துப்பாக்கி டம்மி துப்பாக்கியா? அல்லது நிஜ துப்பாக்கியில் டம்மி தோட்டாக்களை நிரப்பி சுட்டாரா? என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் சக்திவேல் மற்றும் அவரது ஆதரவாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கும்மராஜா தலைமையிலான தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். சக்திவேல், விக்னேசை நோக்கி 4 முறை சுட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story