திருபுவனையில் பரிதாபம்; கீரை பறிக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி


திருபுவனையில் பரிதாபம்; கீரை பறிக்க சென்ற 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலி
x
தினத்தந்தி 12 Jun 2019 10:45 PM GMT (Updated: 12 Jun 2019 7:59 PM GMT)

திருபுவனையில் தோட்டத்தில் கீரை பறிக்க சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலியானார்கள்.

திருபுவனை,

புதுவை மாநிலம் திருபுவனை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் செங்கேணி(வயது60), விஜயா(55). கணவனை இழந்த இவர்கள் இருவரும் கீரை மற்றும் காய்கறி வியாபாரம் செய்து பிழைப்பு நடத்தி வந்தனர். திருபுவனை பகுதியில் உள்ள வயல்வெளிகளுக்கு சென்று கீரைகளை பறித்து வந்து பஜாரில் வைத்து வியாபாரம் செய்வது வழக்கம்.

திருபுவனையில் உள்ள தனியாருக்கு சொந்தமான வயலில் கீரை பறிப்பதற்காக நேற்று முன்தினம் மாலையில் 2 பெண்களும் சென்றனர். இவர்கள் அங்கு செல்வதற்கு சற்று முன்னதாக திருபுவனை, மதகடிப்பட்டு, கண்டமங்கலம் பகுதியில் சூறைக் காற்று வீசியது. இதனால் அந்த பெண்கள் சென்ற வயல் பகுதியில் மின்கம்பி அறுந்து விழுந்து கிடந்துள்ளது.

இதை கீரை பறிக்கச் சென்ற செங்கேணி, விஜயா ஆகியோர் கவனிக்கவில்லை. எதிர்பாராதவிதமாக அதை மிதித்ததில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள். வயலுக்குள் அவர்கள் இறந்து கிடந்தது யாருக்கும் தெரியாமல் போனது.

இந்தநிலையில் நேற்று அதிகாலை அந்த வழியாக சென்ற ஒரு மாடு மின்கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கி அலறியது. இந்த அசம்பாவிதத்தை அறிந்து மாட்டை ஓட்டி வந்தவர் சமயோசிதமாக கயிறை பிடித்து இழுத்து அதை காப்பாற்றினார். அப்போது தான் வயலுக்குள் ஏற்கனவே 2 பெண்கள் மின்சாரம் தாக்கி பலியாகி கிடப்பதை கண்டு ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தார்.

இதுபற்றி மின்துறைக்கு தெரிவிக்கப்பட்டதன்பேரில் உடனே மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மின்சாரம் தாக்கி வயலுக்கு சென்ற 2 பெண்கள் பலியானது பற்றிய தகவல் அறிந்து அங்கு ஏராளமானோர் கூடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவ இடத்துக்கு திருபுவனை சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் விரைந்து சென்று பலியான 2 பெண்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பலியான பெண்களின் உடல்களை பார்த்து அவர்களது உறவினர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

Next Story