குமரி மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 1,600 மனுக்கள் பெறப்பட்டன


குமரி மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சியில் 1,600 மனுக்கள் பெறப்பட்டன
x
தினத்தந்தி 12 Jun 2019 11:00 PM GMT (Updated: 12 Jun 2019 9:14 PM GMT)

குமரி மாவட்டத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் 1678 மனுக்கள் பெறப்பட்டன.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. பூதப்பாண்டியில் உள்ள தோவாளை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியில், வீரமார்த்தாண்டன்புதூர், தோவாளை, ஆரல்வாய்மொழி வடக்கு, ஆரல்வாய்மொழி தெற்கு, குமாரபுரம், செண்பகராமன்புதூர், மாதவலாயம், சண்முகபுரம், திருப்பதிசாரம் போன்ற வருவாய் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மனு கொடுத்தனர். இதில் 130 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை விசாரணை செய்து 15 தினங்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மாதவன், தோவாளை தாசில்தார் சொக்கலிங்கம்பிள்ளை, சமூக பாதுகாப்புத்திட்ட தனி தாசில்தார் அருளரசு மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல், அகஸ்தீஸ்வரம் தாலுகா அலுவலகத்தில் நாகர்கோவில் உதவி கலெக்டர் விஷ்ணு சந்திரன் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் இருந்து 111 மனுக்கள் பெறப்பட்டன.

திருவட்டார்

திருவட்டாரில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள திருவட்டார் தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நிகழ்ச்சி தொடங்கியது. இதற்கு மாவட்ட வருவாய் அதிகாரி ரேவதி தலைமை தாங்கி பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். நிகழ்ச்சியில் 485 மனுக்கள் பெறப்பட்டன. இதில் தாசில்தார் சுப்பிரமணியன், சமூக பாதுகாப்பு தனி தாசில்தார் அருள்ராஜ், துணை தாசில்தார்கள் மரகதவள்ளி, விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு பத்மநாபபுரம் உதவி கலெக்டர் சரண்யா அரி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார். இதில் 302 மனுக்கள் பெறப்பட்டன.

தக்கலை

தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அதிகாரி கிறிஸ்டோபர் ஜெயகுமார் தலைமை தாங்கினார். இதில் 265 பேர் மனு கொடுத்தனர். தொலையாவட்டத்தில் உள்ள கிள்ளியூர் தாலுகா அலுவலகத்தில் உதவி ஆணையர் (ஆயம்) சங்கரலிங்கம் தலைமையில் ஜமாபந்தி நடந் தது. இதில் பொது மக்களிடம் இருந்து 385 மனுக்கள் பெறப்பட்டன. மாவட்டம் முழுவதும் நேற்று 1678 மனுக்கள் பெறப்பட்டன.

Next Story