மாவட்டம் முழுவதும், 9 தாலுகாக்களில் ஜமாபந்தி - கொடைக்கானலில் கலெக்டர் பங்கேற்பு


மாவட்டம் முழுவதும், 9 தாலுகாக்களில் ஜமாபந்தி - கொடைக்கானலில் கலெக்டர் பங்கேற்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:15 PM GMT (Updated: 12 Jun 2019 11:56 PM GMT)

திண்டுக்கல் மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் நேற்று ஜமாபந்தி நடந்தது. கொடைக்கானலில் நடந்த ஜமாபந்தியில் கலெக்டர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார்.

கொடைக்கானல்,

பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் குறைகளை தீர்க்கும் பொருட்டு வருவாய்த்துறையின் சார்பாக வருவாய் தீர்ப்பாயம் எனப்படும் ஜமாபந்தி திண்டுக்கல் மாவட்டத்தின் 9 தாலுகாக்களிலும் நேற்று நடந்தது. கொடைக்கானல் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் கலெக் டர் டி.ஜி. வினய் கலந்து கொண்டு பொதுமக்கள் மற்றும் விவசாயிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

இதில் பூம்பாறை, கூக்கால், வில்பட்டி ஆகிய கிராமங் களை சேர்ந்த பொதுமக்கள் பட்டா மாறுதல், வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை கொடுத்தனர். அந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு, கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.

ஜமாபந்தியில் ஆர்.டி.ஓ. சுரேந்திரன், நகராட்சி ஆணையாளர் முருகேசன், தாசில்தார் வில்சன் உள்பட பல்வேறு அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கிடையே காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய ஜமாபந்தி பகல் 12 மணிக்கு தொடங்கியது. மேலும் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் எந்த அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதைத்தொடர்ந்து வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியம் செக்காபட்டியில் உள்ள ஒருங்கிணைந்த சமுதாய நாற்றங்கால் பண்ணையை கலெக் டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் நிலக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மாவட்ட வருவாய் அலுவலர் வேலு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கினார்.

இதில் நரியூத்து, கோட்டூர், பாளையங்கோட்டை, நிலக்கோட்டை, கோடாங்கி நாயக் கன்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மனுக் களை கொடுத்தனர். இதில் மொத்தம் 242 மனுக்கள் பெறப்பட்டன.

இதேபோல் பழனி தாலுகா அலுவலகத்தில் சப்-கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் ஜமாபந்தி நடந்தது. இதில் தாசில்தார் பழனிச்சாமி மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து வீட்டுமனை பட்டா, நிவாரணம், உதவித்தொகை மற்றும் பிற பொதுவான கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை பெற்றனர்.

அந்தவகையில் நேற்று தொப்பம்பட்டி குறுவட்டத்துக்கு (பிர்கா) உட்பட்ட கிராம மக்களிடம் இருந்து ரேஷன் கார்டு மாறுதல், முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் உள்ளிட்டவை தொடர்பாக 63 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 23 மனுக்கள் ஏற்கப்பட்டன. 37 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 3 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

முன்னதாக, பழனி பகுதியில் வீடு, நிலம் இல்லாத திருநங்கைகள், தங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சப்-கலெக்டரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன்படி நேற்று நடந்த ஜமாபந்தியில் திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிட்டார்.

அதன்படி 27 திருநங்கைகளுக்கு தலா 2 சென்ட் நிலம் வீதம் பாலாறு-பொருந்தலாறு அணை பகுதியில் வீட்டுமனை பட்டாவுக்கான ஆணையை சப்-கலெக்டர் வழங்கினார். இதுகுறித்து அவர் கூறும்போது, வீடு இல்லாத திருநங்கைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கவும் போதிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

Next Story