39 நாட்களுக்கு பிறகு, மார்ட்டின் நிறுவன அதிகாரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு


39 நாட்களுக்கு பிறகு, மார்ட்டின் நிறுவன அதிகாரியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 12 Jun 2019 10:30 PM GMT (Updated: 12 Jun 2019 11:57 PM GMT)

மார்ட்டின் நிறுவன அதிகாரியின் உடல் 39 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவை, 

கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் வீடு மற்றும் நிறுவனங்களில் வருமானவரி துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி சோதனை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து மார்ட்டின் நிறுவனத்தில் காசாளராக பணியாற்றி வந்த பழனிசாமி (வயது 43) கடந்த மே மாதம் 3-ந் தேதி காரமடை அருகே உள்ள ஒரு குட்டையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார்.

அவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில் கடந்த 5-ந் தேதி பழனிசாமியின் உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பழனிசாமியின் உடலில் காயங்கள் இருப்பதால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் அவரது மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பழனிசாமியின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் விசாரணை அதிகாரியாக கோவை 8-ம் எண் மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் நியமிக்கப்பட்டார். அவர் விசாரணை நடத்தி வந்த நிலையில் மறு பிரேதபரிசோதனை நடத்த வேண்டும் என்று பழனிசாமியின் மனைவி மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் கடந்த 28-ந் தேதி மாஜிஸ்திரேட்டு ராமதாஸ் முன்னிலையில் மறுபிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. மறுபிரேத பரிசோதனை முடிந்த பின்னரும் பழனிசாமியின் உடலை வாங்க அவரது உறவினர்கள் முன்வரவில்லை. இதனால் கடந்த மாதம் 3-ந் தேதியில் இருந்து 39 நாட்களாக அவரது உடல் கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் பழனிசாமியின் உடல் 39 நாட்களுக்கு பிறகு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story