குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே, குறுகிய சாலையால் விபத்து அபாயம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை


குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே, குறுகிய சாலையால் விபத்து அபாயம் - நடவடிக்கை எடுக்க கோரிக்கை
x
தினத்தந்தி 12 Jun 2019 10:00 PM GMT (Updated: 12 Jun 2019 11:59 PM GMT)

குன்னூர்-மேட்டுப்பாளையம் இடையே குறுகிய சாலையால் அடிக்கடி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குன்னூர்,

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூர் முதல் கல்லார் வரை மலைப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் காட்டேரி முதல் கல்லார் வரை 14 கொண்டை ஊசி வளைவுகளும், குறுகிய வளைவுகளும் பழமை வாய்ந்த பாலங்களும் உள்ளன. ஆங்கிலேயர் காலத்தில் மலையை வெட்டி அமைக்கப்பட்ட இந்த சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இந்த சாலை தற்போது தேசிய நெடுஞ்சாலைதுறையின் கட்டுப்பாட்டிற்கு கீழ் உள்ளது.

ஒருசில இடங்களில் சாலைகள் மிகவும் குறுகலாக இருப்பதால், அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. மரப்பாலம் கே.எம்.எஸ்.இடையே குறுகிய வளைவுடன் கூடிய சாலையில் எப்போதும் தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது. இதன் மறு புறத்தில் பெரிய பள்ளம் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் நோக்கி வரும் வாகனங்கள் வளைவில் திரும்பும்போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே வாகனங்களை இயக்கி வருகின்றனர். இந்த சாலையை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. இதனை அகலப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் தேசிய நெடுஞ்சாலைதுறையினர் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மேட்டுப்பாளையம் முதல் கக்கநள்ளா வரை உள்ள சாலையை மாநில நெடுஞ்சாலைதுறையிடமிருந்து தேசிய நெடுஞ்சாலைதுறை எடுக்கும் போது சாலையை விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. ஆனால் இதனை தடுக்க தேசிய நெடுஞ்சாலையதுறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. வரும் காலங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலனை கருதியும், விபத்துகளை தடுக்கவும் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையை அகலப்படுத்த உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story