8 வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகளில் மக்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது நல்லக்கண்ணு குற்றச்சாட்டு


8 வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகளில் மக்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது நல்லக்கண்ணு குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 Jun 2019 11:00 PM GMT (Updated: 13 Jun 2019 2:54 PM GMT)

8 வழிச்சாலை, ஸ்டெர்லைட் ஆலை பிரச்சினைகளில் மக்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது என்று நல்லக்கண்ணு கூறினார்.

நாகர்கோவில்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு, கட்சி பிரமுகரின் இல்ல திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று நாகர்கோவில் வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக அரசு கூறுகிறது. இது காவிரி ஆணையத்துக்கு எதிரானது. ஆணையம் என்று வந்தபிறகு கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டுவோம் என்று கூறுவது தவறு. இதற்கு மத்திய அரசு ஒத்துழைப்பது தமிழகத்துக்கு செய்யும் துரோகம் ஆகும். இதனை எதிர்த்து அனைத்து கட்சிகளும் போராட வேண்டும்.

டெல்டா பாசனத்துக்காக ஜூன் 12–ந் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால் அதைப்பற்றி தமிழக அரசு கவலைப்படாமல் அமைதியாக இருந்து மவுனம் சாதித்து வருகிறது. கூடங்குளம் அணு உலைக்கழிவை அங்கேயே புதைப்பது ஆபத்தானது. இதை கைவிட வேண்டும். இதுதொடர்பாக மக்களுக்கு கருத்து சொல்லக்கூட அனுமதி மறுத்து அரசு நெருக்கடி கொடுக்கிறது.

தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசிடம் நீண்டகால திட்டமிடுதல் இல்லாததால் தான் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னையில் குடிநீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். மாதம் 3 ஆயிரம் ரூபாய் குடிநீருக்காக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 37 ஆயிரத்து 500 ஏரிகள் இருந்தன. தற்போது அதில் 5 ஆயிரம் ஏரிகள் காணாமல் போய் விட்டது. ஆறுகள், குளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஆற்றுப்படுகைகளில் மணல் கொள்ளையடிக்கப்படுகின்றன. இயற்கையும் அழிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் தண்ணீர் வியாபாரமாகி விட்டது.

ஸ்டெர்லைட் பிரச்சினை தொடர்பாக குறும்படத்தை வெளியிட்ட முகிலன் காணாமல் போய் 100 நாட்களை கடந்து விட்டது. அவர் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் எங்கே? என்பது தான் தெரியவில்லை. அவரை உயிருடன் கொண்டுவர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் நிர்வாகம் திறம்பட நடைபெறவில்லை. 8 வழிச்சாலை பிரச்சினை, ஸ்டெர்லைட் பிரச்சினைகளில் மக்களுக்கு எதிராக தமிழக அரசு செயல்படுகிறது. ஆட்சியை காப்பாற்ற நினைக்கிறார்களே தவிர, மக்களைப்பற்றி அவர் கள் கவலைப்படவில்லை.

இவ்வாறு நல்லக்கண்ணு கூறினார்.

Next Story