14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் சட்டப்படி குற்றம் நீதிபதி பேச்சு


14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் சட்டப்படி குற்றம் நீதிபதி பேச்சு
x
தினத்தந்தி 13 Jun 2019 10:45 PM GMT (Updated: 13 Jun 2019 7:46 PM GMT)

14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் சட்டப்படி குற்றம் என்று முதன்மை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி முரளீதரன் தெரிவித்தார்.

அரியலூர்,

உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு குறித்த சட்ட உதவி முகாம் பெரம்பலூர் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி முரளீதரன் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளரும், சார்பு நீதிபதியுமான வினோதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கருப்பசாமி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தொடர்ந்து தலைமை குற்றவியல் கோர்ட்டு நீதிபதி முரளீதரன் பேசுகையில், “14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வேலைக்கு அமர்த்துதல் சட்டப்படி குற்றம். அவ்வாறு வேலைக்கு அமர்த்துபவர்கள் சட்டப்படி தண்டனைக்கு உள்ளாவார்கள். மேலும் அவ்வாறு தெரிய நேரிட்டால் உடனடியாக மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினை தொடர்பு கொண்டால் தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு

கட்டாய கல்வி சட்டத்தின்படி அனைவரும் கல்வி பயிலும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும் ஆசிரியர், மாணவ- மாணவிகளிடையே இணக்கமான சூழ்நிலைகள் ஏற்படும்பட்சத்தில் குற்றங்கள் குறைய வாய்ப்பு உண்டு. எனவே அனைத்து பிரச்சினைகளுக்கும் தயங்காமல் சட்டப்பணிகள் ஆணைக்குழுவினை அணுகினால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். இதில் வக்கீல்கள், பள்ளி மற்றும் சட்ட கல்லூரி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பெரம்பலூர் மூத்த வக்கீல் காமராஜ் வரவேற்றார். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் சுந்தரராஜூ நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் அதிகாரி வெள்ளைச்சாமி மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.

Next Story